பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.

Thursday 22 September 2011

தமிழா! தமிழா!! உன்னை வளர்ப்பது எதுவானாலும்... உயிரையும், உணர்வையும் வளர்ப்பது எது? என் உயிர் தமிழா!


நீங்கள் கவிதைப் பிரியரா?  

அப்ப வாங்க, நீங்க நம்மக் கூட்டாளி!... 

சற்று வாய்விட்டு உரக்க அனுபவித்துப் பாடுங்கள்... 

அதன் அருமை, அது கூறும்  மென்மையான உண்மை என அத்தனையும் புரியும்.

தமிழின் இனிமை

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சும்
பாகிடை ஏறிய சுவையும்,
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும் - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!


பொழிலிடை வண்டின் ஒலியும் - ஓடைப்
புனலிடை வாய்க்கும் கலியும்,
குழலிடை வாய்க்கும் இசையும் - வீணை
கொட்டிடும் அமுதப் பண்ணும்,
குழவிகள் மழலைப் பேச்சும் - பெண்கள்
கொஞ்சிடும் இதழின் வாய்ப்பும்,
விழைகுவ னேனும், தமிழும் - நானும்
மெய்யாய் உடலுயிர் கண்டீர்!


பயிலுறும் அண்ணன் தம்பி - அக்கம்
பக்கத் துறவின் முறையார்,
தயைமிக உடையாள் அன்னை - என்னைச்
சந்ததம் மறவாத் தந்தை,
குயில்போற் பேசிடும் மனையாள் - அன்பைக்
கொட்டி வளர்க்கும் பிள்ளை,
அயலவ ராகும் வண்ணம் - தமிழ்என்
அறிவினில் உறைதல் கண்டீர்!


நீலச் சுடர்மணி வானம் - ஆங்கே
நிறையக் குளிர்வெண் ணிலவாம்,
காலைப் பரிதியின் உதயம் - ஆங்கே
கடல்மேல் எல்லாம் ஒளியாம்,
மாலைச் சுடரினில் மூழ்கும் - நல்ல
மலைகளின் இன்பக் காட்சி,
மேலென எழுதும் கவிஞர் - தமிழின்
விந்தையை எழுதத் தரமோ
?

செந்நெல் மாற்றிய சோறும் - பசுநெய்
தேக்கிய கறியின் வகையும்,
தன்னிகர் தானியம் முதிரை - கட்டித்
தயிரொடு மிளகின் சாறும்,
நன்மது ரஞ்செய் கிழங்கு - கானில்
நாவி லினித்திடும் அப்பம்,
உன்னை வளர்ப்பன தமிழா! - உயிரை
உணர்வை வளர்ப்பது தமிழே! 


எப்படி இருக்கிறது?... எத்தனை முறை படித்தாலும் அத்தனை முறையும் அதே சுவை அல்லவா!

எனக்குப் பிடித்த பாரதிதாசனின் கவிதைகளில் இது முதன்மையானது...
இந்த அவசர உலகில் இவைகளை படிக்க நேரமில்லை தான்...
அதனால் தான் இங்கே இதை பதிவிட்டு இருக்கிறேன்.

நன்றி வணக்கம்,
அன்புடன்,
தமிழ் விரும்பி ஆலாசியம் கோ.

8 comments:

சக்தி கல்வி மையம் said...

பகிர்வுக்கு நன்றிகள்...


தமிழர்களை கேவலப்படுத்துவதா?

Unknown said...

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…
பகிர்வுக்கு நன்றிகள்...

வருகைக்கும் அன்பிற்கும் நன்றிகள் நண்பரே!

கோகுல் said...

மனதுக்குள் படிப்பதை விட நீங்க சொன்னதை போல்
வாய் விட்டுப்படித்தேன்! தேன்சுவைதான்!

பள்ளிகளில் தமிழ் ஆசிரியர் பாடுகையில் தோன்றிய உணர்வு!
பகிர்வுக்கு நன்றி!

Unknown said...

////கோகுல் சொன்னது…
மனதுக்குள் படிப்பதை விட நீங்க சொன்னதை போல்
வாய் விட்டுப்படித்தேன்! தேன்சுவைதான்!

பள்ளிகளில் தமிழ் ஆசிரியர் பாடுகையில் தோன்றிய உணர்வு!
பகிர்வுக்கு நன்றி!////

ஆம், உண்மை தான் நான் ஏழாம் வகுப்பில் படிக்கும் பொது, எனது தமிழாசான், கரு.சண்முகம் ஐயா அவர்கள் தான் எனக்கு இந்தப் பாடலை அவர் கைப்படவே எழுதிக் கொடுத்தார்கள்... அதை வெகு நாட்கள் வைத்திருந்தேன்... நாம் வொவ்வொருவரும் நமது மானசீகமான தமிழாசிரியர்களை மறக்க முடியாதல்லவா! தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரரே!

Anonymous said...

முதன்முறை இந்த பாடலைப்படிக்கிறேன், மிகவும் அருமை. uma

Unknown said...

////Uma said முதன்முறை இந்த பாடலைப்படிக்கிறேன், மிகவும் அருமை.
23 செப்டெம்ப்ர், 2011 12:53 pm///

அப்படியா மகிழ்ச்சி... பின்னூட்டத்திற்கு நன்றிகள் உமா..

vidivelli said...

அன்பு உறவே நலமா?
நீண்ட நாளையின் பின் இணைவதில் மகிழ்ச்சி.

ஐயையோ நீங்க சொனீங்க வாய்விட்டு பெரிதாய் படிக்கச்சொல்லி அப்படியே செய்தேன்.கதவைத்தட்டுகிறார்கள் பக்கத்து றூம் காரர்.
பொலிஸுக்கு கோல்பண்ணுறாங்க என்ன செய்ய?hahaha
அது ஜோக்...

உண்மையிலேயே படித்தேன் நல்லாய்த்தான் இருக்கு.
உங்கள் பகிர்விற்கு எனது மனமார்ந்த நன்றிகள் .

Unknown said...

////vidivelli சொன்னது…
அன்பு உறவே நலமா?
நீண்ட நாளையின் பின் இணைவதில் மகிழ்ச்சி.

ஐயையோ நீங்க சொனீங்க வாய்விட்டு பெரிதாய் படிக்கச்சொல்லி அப்படியே செய்தேன்.கதவைத்தட்டுகிறார்கள் பக்கத்து றூம் காரர்.
பொலிஸுக்கு கோல்பண்ணுறாங்க என்ன செய்ய?hahaha
அது ஜோக்...

உண்மையிலேயே படித்தேன் நல்லாய்த்தான் இருக்கு.
உங்கள் பகிர்விற்கு எனது மனமார்ந்த நன்றிகள் ./////

வாருங்கள் சகோதிரி....
வெகுநாட்களுக்குப் பிறகு வந்ததில் மகிழ்ச்சி.
வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றிகள்...

Post a Comment