பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.

Monday 24 December 2012

மகாகவியவன் நினது குருவென்பதை மறந்தாயோ?



பொழுதுப் போக்க நீயொன்றும் -சும்மாப்

புளுக வேண்டாம்; மனமே!

போதைத் தரும் புகழுக்கு -அதிப்

பேதையென அலைய வேண்டாம் மனமே!

அடுத்தவர் அங்கீகரிக்க வேண்டுமென -அனுதினமும்

பிடித்ததெல்லாம் பேயெனச் செய்யாதே மனமே!

 

தடுத்தவர் கூறினாலும் கருத்தைத் தவறென

மறுத்தவர் கூறினாலும் அதுன்னை -வந்து

வருத்துவதும் வீணே; என்றுணர்வாய் மனமே!

கருத்து தனைக்கூற உனக்கிருக்கும் உரிமை

மறுத்தவர்கூற மட்டுமல்லாது போகுமோ மனமே!

அங்கீகாரம் வேண்டுவதும் ஆணவத்தின் தூண்டுதலே

அகங்காரம் கொண்ட அற்பமனமே - நினது

அகமழிய; வேண்டாம் அப்படியொரு ஆறுதலே!

 

உங்கருத்தை அங்கீகரித்தாலும்; இங்கீகரித்தாலும் மனமே

ஆங்கதவர் அனுமானமோ; அபிப்ராயமோ அன்றி

ஈங்கிது இறுதியான உறுதியான சரியான

ஓங்குயர் கருத்தென்று நெகிழ்ந்துழலாதே மனமே!

 

''என்ன வரங்கள்,பெருமைகள்,வெற்றிகள்,
எத்தனை மேன்மைகளோ!'' - அவை அத்தனையும்
''தன்னை வென்றாலவை யாவும் பெறுவது
சத்திய மாகுமென்றே'' முன்னைய முனிவர்

கருத்தை அன்றே அழகுறப் பாடி

திருத்தமாக சொன்னானே மகாகவியவன் நினது

குருவென்பதை மறந்தாயோ? மடமனமே!


Thursday 4 October 2012

வேதமுனிகள் தொழும் தேவியே!



வெள்ளை உள்ளம் கொண்டவருக்கு
வேண்டும் வரம் தருபவளே!
எல்லையில்லா பிரபஞ்சம் தனை 
தன் னகத்துள் கொண்டவளே!

கல்லா மில்லா உள்ள
மதைக் கொண்ட முனிவர்களின்
சொல்ல முதாய் திகழ்பவளே 
இச்சா ஞான கிரியாசக்தியே

வல்லமைத் தாரோயோ வாழ்வெலாம்
தெள்ளுத் தமிழ் கவிப்பாடி
சித்தம்நிறை தேவியுனை நித்தமும் 
நின் பாதம் பணிந்திடவே!

நீயின்றி நானில்லை நினது
நினைவின்றி எனது யிரில்லை
கனவிலும் பிரிவதில்லை நினைக்
காணும்வரை நான் ஓய்வதில்லை...

ஐம்பொருளின் ஆக்கமானாய் -என்
ஐம்புலனின் தாக்கமும் ஆனாய்
ஐயத்திற்கு அப்பால் நிற்கும்
ஜெயத்திற்கு ஆதாரமும் ஆனாய்

பேரொளியில் பிறந்தாயோ! எந்தை 
பேரொளியாய் பிறந்தாயே; எந்தாயே!  
பேரொலி எழுப்பும் மின்னல்கொடியே
பேரொலி எந்தன் மனப்
பேய் தனைக் கொள்ளுமோ!

கூறடி!; ஆனந்த பைரவி
யாரடி?; நானென்று எனக்கு;
பாரடி!; நான் உந்தன்
காலடி!; நின்றேக் கதறுகின்றேன்.

சேவடிதனை எந்தன் சிரமீதே 
ஓரடி யாவது வைப்பாயோ!
பூவடிதனை போன்று கின்றேன் 
கேளடித் தாயே யுனைக்
கெஞ்சிப் பணி கின்றேன்   

கூறாயோ ஒருபதில் கூறாயோ
பாராயோ கடைக்கண் கொண்டு
பாவம் யாவும் பொடிப் பொடியாக! 
இரங்காயோ இறங்கி என்
உயிருக்குள் உயிராய் உறங்கிக்கிடக்கும்
பேரொளி யினைத் தீண்டாயோ!

எங்கெங்கும் காணினும் நீயென்றால்
என்னுள் ளிருப்பதும் நீயன்றோ!
என்னுள் இருப்பதும் நீயென்றால்
எப்படிக் காண்பேன் நானின்றே.

அல்லும் பகலும் அல்லல்படும்
பிள்ளை யான் வேண்டுவது 
தில்லைக்கு எட்ட வில்லையோ!
கள்ளமில்லா எனதுள்ளம் கதறுவதும்
உன்செவிகளில் விழவும் இல்லையோ!

பிள்ளையான் பேயாய் உழல்கிறேன்
பேசாது இனியும் இருப்பாயோ!
சொல்லடி சிவசக்தி நிந்தன்
சோதனை இன்னும் நீளுமோ!

வேதனைத் தீர்ப்பாயோ இவ்வுடல்
வெந்தே தீயுமுன்னே எந்தன்மன  
வேள்வி தனை ஏற்பாயோ
வேண்டியதை வேண்டி நிற்கின்றேன்
விரைந்தே வந்தெனைக் காப்பாயோ!

வேதமுனிகள் தொழும் தேவியே!
வேதங்களை பாதமாக கொண்டவளே!
வேதநாயகியே! வினைகள் தீர்ப்பாயே
ஊனில் உறைந்தவளே! எந்தன்
உயிரில் கலந்தவளே அருள்வாயே!

கொல்லடி எந்தன் மனம்தனை;
வில்லோடு வரும் மன்மதனை
நில்லடா நீயங்கே என்றுநிறுத்தி
வல்லனாய் வென்றிடவே; எனக்கிங்கே
வல்லமைத் தாரோயோ -பத்ர
காளீ! நீலீ!! திரிசூலீஇ!!!

அக்னியால் சுட்டெரிப்பாய் எந்தன்
ஆனவமதையே; ஆவேசமுடனே 
ஆணிவேரோடு பெயர்த் தெடுப்பாய்
ன் கந்தை தனையே
நித்தமும் நினைப்பணிகின்றேன்; நீயே
நிமலன்பாதம் சேர்ப்பாய் என்தாயே! 


Tuesday 11 September 2012

எட்டயபுரத்திலே உதித்த சிகப்பு சூரியனே!




மஹாகவி பாரதி நமக்கு பல லட்சியங்களை விட்டுச் சென்று தொண்ணூறு ஆண்டுகளைத் தாண்டிவிட்டது...

மகாகவியின் இந்த நினைவு நாளில் அவனுடைய உயரிய சிந்தனைகளை இளம்பிஞ்சுகளின் மனதிலும் விதைக்க அரும் பாடுபடும் பெரியவர்களுக்கு எனது வணக்கங்களும், வாழ்த்துக்களும் கூறி...

பாரதிக்கு திருவையாற்றில் இருதினங்களுக்கு முன்பு எடுத்த விழாவின் சிலப் படங்களையும் பார்வைக்கு வைக்கின்றேன்!



இளங்குயில்கள் இரண்டு இனியகவிகள்பாட எந்தன்
இதயம் இனித்ததே இன்பத்தேனாய்!


புத்தம் புதுக்காலை புதியதோர் உலகம்படைக்கவே
புறப்பட்டோமென்றே பாரதியின் குழந்தைகளாக 
பூத்துக் குலுங்குங்கிய அவ்வேளை - நெஞ்சிலொரு
சக்திப்பிறக்கிறது அதைக்கண்ட இவ்வேளை !


உடல் போருளாவி யனைத்தையும் உயர்
உலகிற்கே அளித்து உன்னத மானுடம் 
உலகத்தோர் உயிர்க்கொடியில் பூக்கவே
உத்திகளை பாடிசென்றேயே பாரதி!

உனது நினைவுகள் மாத்திரம் அல்ல 
உனது கனவுகள் தான் எங்கள் 
உன்னத இலட்சியங்கள் அவைகளை
உன்னினைவுநாளில் புதுப்பித்து கொள்கிறோம்!

பாமரனையே நோக்கினாய் பாமரனோடு பழகினாய் 
பாமரனுக்காக பாடினாய் பாமரனை எண்ணி வாடினாய்
பாமரனையும் சாடினாய் பாடியக்கவிதைகளை சம்ர்பித்தாய் 
பாமரனுக்கே; பாமரன்யானதை மறப்பேனோ?

எட்டயபுரத்திலே உதித்த சிகப்பு சூரியனே 
எங்கள் இதயமெல்லாம் ஒளிபரப்பி - அறியாமை
என்னும் இருட்டைப்போக்கிய செந்தமிழ்கவிராஜனே! 
என்றென்றுமுனை  நன்றியோடு நினைக்கின்றோம்!

வாழ்க வளர்க பாரதியின் புகழ்!







Friday 13 April 2012

நந்தனத்திற்கு இதயம் கனிந்த வந்தனம்!

நந்தனத்திற்கு இதயம் கனிந்த வந்தனம்!
வந்தேபல செல்வங்களும் இங்கே தங்கணும்
நல்லாரும் வாழ்ந்திட; தீயோரும் திருந்திட 
பொல்லாரே இல்லாதுபோக வேண்டுமென்று  
எல்லாம் வல்ல இறைவனை இப்போதே 
இந்நாளில் பணிந்தே வணங்கு வோம்.

கல்வியும் கேள்வியும் சிறக்க வேண்டும்
கணினியின் அற்புதம் பெருக வேண்டும்
இல்லாதவர் இல்லாதொழிய வேண்டும்
இருப்பவர் யாவருக்கும் கொடுக்க வேண்டும்
வறுமையும் கொடுமையும் மடிய வேண்டும்
மனிதநேயம் எல்லோரிடமும் வளரவேண்டும்.

சொல்லால் கொல்லும் கொடுமை போகவேண்டும்
முள்ளாய் குத்தும் கவலையும் சாகவேண்டும் 
கல்லாய்ப் போன மனங்களும் கனியவேண்டும்
நில்லாது தொடரும் போரும் ஒழிய வேண்டும் 
கல்லாதுசெயும்  பொல்லா தொழிலதிபரும் திருந்தவேண்டும்
எல்லாம்வல்ல இறைவனும் அருளவேண்டும். 


அனைவருக்கும் இனிய நந்தன வருடத் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
இறைவன் அருள் பெற்று வாழ்க! வளமுடன்!!


Wednesday 11 April 2012

தந்தையே இது விந்தையே!




பரமன் அழித்த முப்புரம் - மீண்டும்  
பரா(ரம)சக்திப் படைத்த அற்புதம்!


சோதியனே சுடர்மிகு ஞான வடிவானவனே 
வேதியனே வேதமாக நின்றொளிரும் தூயவனே 
தேவி ஒருபாகனே அண்டங்களாயிரம் கடந்த  
ஆதி அந்தமில்லா அமுதே

முதே அறிவே ஆனந்தமே - அடியார்
குமுத மனம் துதிக்கும் கோவே  
அமு(மிர்)தம் தரவே ஆலகாலம் உண்ட
குமுதவல்லி தொழும் தேவனே!

தேவனே தேவாதி தேவனே ஆதிமூலனே 
மூவரின் அன்னை முழுமுதற் காதலனே 
மூவாமருந்தே முப்புரம் அழித்தவனே எப்புறமும்
மேவ எங்கும்நிறை பிரம்மமே!

பிரம்மமே ஆதிஅந்த மில்லாத்தூய பேரொளியே  
பிரபஞ்ச அமைதியில்; விழைந்த விருப்பத்தால் 
பிரக்ஞை மேவி ஒளிகீற்றாய் உடைபட்டே 
பிராணனோடு ஆகாயம்சேர் ஞாயிறே!

ஞாயிறாய் ஒளிரும் அக்னிப் பரமனொடு 
ஞமர்சக்தியும் கொஞ்சிக் குலவி ஞெகிழிஒலிக்க
ஞமலிஉண்ட தோர்ஞஞ்சை மேவப்பெருங் கூத்தாடி 
ஞான்று ஞெகிழடுதீ பொங்கியதே!

(ஞமர் - பரந்து விரிந்த 
ஞெகிழி - சலங்கை 
ஞமலி – கள்  / மயில் 
ஞஞ்சை - மயக்கம்
ஞான்று - அந்த நேரம் / அப்பொழுது 
ஞெகிழடுதீ =ஞெகிழ் + அடுதீ = உருகிப் பெருகிய பெரும் தீ.




பொங்கிய பேரொளி பரவெளி எங்கும் 
தங்கிதோடு டையோன் உடுக்கை யொலியோடு 
சங்கும்பெரும் பறையும் சேர்ந்தொலிக்க வெடித்து 
வெங்கனல்தெறித்து சக்திசமைத்தது  முப்புரமே.

முப்புரமேவிய செந்தீப்பந்துகள் சக்கரமாயோடி முட்டிமோதி 
எப்புறமும் வியாபித்தேநிற்கும் சக்தியின் ஆளுமையிலே 
முப்பொழுதும் முடிவில்லா மூலத்தின் மேனியாக  
எப்பொழுது மெழில்கொஞ்சுகிற சோதியனே!




Wednesday 28 March 2012

அம்மா நீ எங்கே!





எல்லாமாகி எங்கும் நிறை பராசக்தியே
பொல்லா வினையறுப்பாய் ஆதிசக்தியே!. 


வெடிபடு அணுவினுள் ஒளியுரு கடும்பொறி;
இடியொடு பிறந்தக்கொடுவிட அரவச்சீறி; நடுநடுங்க 
துடிதுடிக்க; சடசட, படபடவெனப்  பாயும்மின் 
கொடியொடு ஓடிடும் தூதூமணியே! 

அறிவினில் உறையும்; கருவென வளரும்;
பரிதியில் ஒளிரும்; வளியென பரவும்;
விரிவெளி யெனத் திகழும்; குணம்,
குறியிலா ஞானப்பெரும் திரளே! 

ஒன்றுமில்லா தொன்றில் ஒன்றாய் - என்றும் 
ஒன்றாகி நின்றே பண்டு நன்னுலகை 
நன்றாய் படைக்க ஒன்றும் பலவாய் 
ஒன்றியழ கொழிக்கும் ஆதிசக்தியே! 

பெருமிருள் நெடுதுயில் சடுதியில்மறைய -விண்
உறுபெரும் பொருளது சுடரொளி நிறைய 
மருளெனும்செய் பாவமதுரு உறுவது ஒழிய 
பொறுத்தருள்புரிவாய் கருணைப் பெருங்கடலே!

-நன்றி.