பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.
Showing posts with label பாரதிதாசன். Show all posts
Showing posts with label பாரதிதாசன். Show all posts

Thursday, 22 September 2011

தமிழா! தமிழா!! உன்னை வளர்ப்பது எதுவானாலும்... உயிரையும், உணர்வையும் வளர்ப்பது எது? என் உயிர் தமிழா!


நீங்கள் கவிதைப் பிரியரா?  

அப்ப வாங்க, நீங்க நம்மக் கூட்டாளி!... 

சற்று வாய்விட்டு உரக்க அனுபவித்துப் பாடுங்கள்... 

அதன் அருமை, அது கூறும்  மென்மையான உண்மை என அத்தனையும் புரியும்.

தமிழின் இனிமை

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சும்
பாகிடை ஏறிய சுவையும்,
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும் - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!


பொழிலிடை வண்டின் ஒலியும் - ஓடைப்
புனலிடை வாய்க்கும் கலியும்,
குழலிடை வாய்க்கும் இசையும் - வீணை
கொட்டிடும் அமுதப் பண்ணும்,
குழவிகள் மழலைப் பேச்சும் - பெண்கள்
கொஞ்சிடும் இதழின் வாய்ப்பும்,
விழைகுவ னேனும், தமிழும் - நானும்
மெய்யாய் உடலுயிர் கண்டீர்!


பயிலுறும் அண்ணன் தம்பி - அக்கம்
பக்கத் துறவின் முறையார்,
தயைமிக உடையாள் அன்னை - என்னைச்
சந்ததம் மறவாத் தந்தை,
குயில்போற் பேசிடும் மனையாள் - அன்பைக்
கொட்டி வளர்க்கும் பிள்ளை,
அயலவ ராகும் வண்ணம் - தமிழ்என்
அறிவினில் உறைதல் கண்டீர்!


நீலச் சுடர்மணி வானம் - ஆங்கே
நிறையக் குளிர்வெண் ணிலவாம்,
காலைப் பரிதியின் உதயம் - ஆங்கே
கடல்மேல் எல்லாம் ஒளியாம்,
மாலைச் சுடரினில் மூழ்கும் - நல்ல
மலைகளின் இன்பக் காட்சி,
மேலென எழுதும் கவிஞர் - தமிழின்
விந்தையை எழுதத் தரமோ
?

செந்நெல் மாற்றிய சோறும் - பசுநெய்
தேக்கிய கறியின் வகையும்,
தன்னிகர் தானியம் முதிரை - கட்டித்
தயிரொடு மிளகின் சாறும்,
நன்மது ரஞ்செய் கிழங்கு - கானில்
நாவி லினித்திடும் அப்பம்,
உன்னை வளர்ப்பன தமிழா! - உயிரை
உணர்வை வளர்ப்பது தமிழே! 


எப்படி இருக்கிறது?... எத்தனை முறை படித்தாலும் அத்தனை முறையும் அதே சுவை அல்லவா!

எனக்குப் பிடித்த பாரதிதாசனின் கவிதைகளில் இது முதன்மையானது...
இந்த அவசர உலகில் இவைகளை படிக்க நேரமில்லை தான்...
அதனால் தான் இங்கே இதை பதிவிட்டு இருக்கிறேன்.

நன்றி வணக்கம்,
அன்புடன்,
தமிழ் விரும்பி ஆலாசியம் கோ.