பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.

Friday 15 July 2011

இசைஞானி இசை அமைத்த முதல் பாடல் அதுவாம்?


 இசைஞானி இசை அமைத்த முதல் பாடல் அதுவாம்?

திரிவேணி சங்கமம்.

மனிதர்குல மாணிக்கம்... ஜவஹர்லால் நேரு அவர்களைக் காலன் அழைத்துப் போன வேளை!

நமது கவிபாடும் சோலை, கவியரசு அவர்களின் இதயத்தில் அந்தச் செய்தி இடியாய்  இறங்கியதால்; அவரின் இதயத்தில் கசிந்தோடும் செங்குருதியை நிரப்பிக் கொண்டுகவிஞரின் இரு விரல்களுக்கு இடையே குடிபுகுந்த அந்தப் பேனா... துக்கத்தைக் கக்கியது....

அதுவும், செங்கனலாய் வெடித்துச் சிதறி பீறிட்டு பொங்கி எழுந்து; தமிழ் பாரெங்கும் வழிந்தோடியது....

இதோ! அந்த துக்கம் தோய்ந்து விழுந்த வரிகள்!... கோபம் கொண்டு எழுந்து செங்கனலாய், வெடித்துச் சிதறுவதை பாருங்கள்.

சீரிய நெற்றி எங்கே?
சிவந்தநல் இதழ்கள்  எங்கே?
கூறிய விழிகள் எங்கே?
குறுநகை போனது எங்கே?
நேரிய பார்வை எங்கே?
நிமிர்ந்தநன் நடைதான் எங்கே?
நிலமெல்லாம் வணங்கும் தோற்றம்
நெருப்பினில் வீழ்ந்தது இங்கே!...

அம்மம்மா என்ன சொல்வேன்
அண்ணலை தீயில் இட்டார்!
அன்னையை தீயில் இட்டார்!!
பிள்ளையை தீயில் இட்டார்!!!
(
அம்மம்மா என்ன சொல்வேன்....)

தீயவை நினையா நெஞ்சை
தீயிலே கருக விட்டார்!
தீயசொல் சொல்லா வாயை
தீயிலே கருக விட்டார்!!
(
அம்மம்மா என்ன சொல்வேன்....)

சாவே உனக்கொரு நாள்
சாவு வந்து சேராதோ!
சஞ்சலமே நீயும் ஒரு
சஞ்சலத்தைக் காணாயோ?
தீயே உனக்கொரு நாள்
தீ மூட்டிப் பாராமோ?
யாரிடத்து பொய் உரைப்போம்?
யார்மொழியில் அமைதி கொள்வோம்?...
---------------------------------------------------------------------------------------------------------------------




கவியரசு கண்ணதாசன் அவர்கள் இந்தப் பாடலை வடித்தபோது நடந்த நிகழ்வைப் பற்றி அறிய நேர்ந்தது! நீங்களும் அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.


இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித நேரு அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கிடைத்த உடன் அனைத்துப் பத்திரிக்கைகளிலும் இரங்கல் கட்டுரையை வெளியிட்டு இருந்தார்கள். அன்று மாலை கடற்கரையிலே இரங்கல் கூட்டமும் நடக்க ஏற்பாடு நடந்து கொண்டும் இருந்தது.

அப்போது பொதுவுடைமை இயக்கத்தைச் சேர்ந்த தோழர்கள், பால தண்டாயுதமும், தா.பாண்டியன் அவர்களும் கவிஞரைக் கண்டு கவிதைப் புனைய சொல்ல வேண்டும் என்ற நோக்கோடு சென்று பார்த்து இருக்கிறார்கள்.

அங்கு கவிஞர், தந்தையை இழந்த மகனைப் போல தேம்பி, கண்ணீர் விட்டு அழுது கொண்டு இருந்திருக்கிறார், அப்போது அங்கு சென்ற இவர்கள் இருவருக்கும் அவரைத் தேற்றுவதே பெரும் பாடாகி விட்டதாம்.

பாலன், "கவிஞர், இதே சோகத்தோடு மாலைக் கூட்டத்தில் பாட ஒரு பாடலை எழுதுங்கள்" என்றாராம். கவிஞரின் உதவியாளர் ஒரு ஐந்தாறு மாத்தரைகளையும், தண்ணீரையும் கவிஞருக்குக் கொடுத்தாராம். காய்ச்சல் நெருப்பாய் கொதித்ததாம் கவிஞருக்கு.

நாற்காலியில் சாய்ந்துக் கொண்டு கண்ணீர் விட்டபடியே ராகம் போட்டுப் பாடிக் கொண்டு எழுதச் செய்வதை தா. பா. பார்த்துக் கொண்டு இருந்ததாக , நினைவு கூறுகிறார்.
---------------------------------------------------------------------------------------------------------------

"
கவிஞர்கள் என்றாலே உணர்ச்சிக் கடலில் மூழ்கக் கூடியவர்கள். அவர்கள் நவரச உணர்வுகளின் எல்லைவரை அதாவது, நுனிவரை செல்பவர்கள். அவர்கள் மெல்லிய இதயம் கொண்டவர்கள். ஆனால், அவர்கள் பலவீனமானவர்கள் அல்ல. 

அவர்கள் எளிதில் காயப் படக் கூடியவர்கள், ஆனால், முழுச் சுரணையும் உள்ளவர்கள். அதோடு, அவர்கள் சுதந்திரமானவர்கள். புறக்கண்ணை மறந்து அகக் கண்ணாலே அதிகம் பார்ப்பவர்கள். ஏனென்றால், அதற்கு உண்மை மட்டுமே தெரியும்!

அவர்களின் படைப்புகளில் உள்ள நயமும், அழகும்உயிரோட்டமும் அதனாலே அவர்களுக்கு வசப் படுகிறது.  அது அந்தப் படைப்பை வாசிப்போரையும் எளிதில் ஆட்கொள்ளும்  அளவிற்கு சென்று விடுகிறது.


அவர்கள் வாழும் சமுதாயத்தை ஆற்றுப் படுத்த அவதரித்த அவதாரர்கள். அவர்களின் அந்த முயற்சிக்கு தடையாய் வரும் எதையும் எரியும் கனலாய் சுட்டெரிப்பது மட்டும் அல்ல... அதற்கு உதவியவர்கள் பிரியும் போது, அவர்களின் பிரிவுக்கும் கண்ணீர் வடிப்பவர்கள் ஆவர்.

ஆக, அப்போது  கண்ணதாசன்; அந்த காலக் கணித மேதை கதறி அழுததும், கண்ணீர் விட்டதும் அதன் பொருட்டே என்று சொல்லவும் வேண்டுமோ? அப்படி எழுதப் பட்ட அந்தப் பாடல், அன்று மாலை கூட்டத்தில் திரு. சீர்காழி கோவிந்தராஜனின் கம்பீரக் குரலில் உணர்ச்சிப் பொங்கப் பாடினாராம். அந்தப் பாடல் தான் மறுதினம் பத்திரிக்கைகளிலே வந்ததாம்.

சரி கட்டுரையின் நோக்கிற்கு வருவோம்!....

அப்படி அந்த துக்கத்தை சுமந்து கொண்டு வந்தத் தந்தியை! தீக்கதிரை!! ஜனசக்தியாய் விளங்கிய அந்த சிகப்பு மலரின் இறப்புச் செய்தியால் விளைந்த அந்த பா(பூ)மாலையில்  தேனது வடியாமல் துக்கம் தாளாமல் கண்ணீர் வடிந்தது!!

அன்று அந்த செய்தித்தாள் சற்று கனத்தே இருந்தது. குடகுமலை குளிராலா? அல்லது இதயம் கனக்கும் செய்தியை தாங்கி வந்ததாலா? அல்லது அதுவே அழுது, அழுது தன்னை தானே நனைத்ததாலா? அல்லது இரங்கல் பாமாலையில் வடிந்தக் கண்ணீராலா? யாரறிவார்?.

அப்படி கவியரசரின் துக்கத்தை சுமந்துச் சென்ற அந்த சோகப் பாடல் ஒரு பதினேழு வயது சிறுவனின் கரம் சேர்ந்தது. அவன் கண்களில் தெறித்த, கவியரசரின் செங்குருதித் தமிழ் வரி; அச்சிறுவனின் கண்களின் வழியே நுழைந்து, இதயம் புகுந்தது. ஆம், இதயம் புகுந்தது.

அது புனல் திரியும் கருவண்டுகள்துளையிட்ட, நாணல் தோகையின் ஓட்டையின் வழியே, காற்றுப் புகுந்து நாதத்தை எழுப்புவது போல்இந்த சோகப் பாடல் அவனுள் புகுந்து ஒரு சோக ராகத்தை சுரம் பிரித்தது.


சுக ராகம் சோகம் தானே!!... 

(Sweetest Songs are those that tell us of saddest Thoughts - Shelly.) 


ஆம், அப்படி அந்தச் சிறுவனின் கண்களின் வழியே புகுந்து, சிந்தையில் கருவுற்று நின்றகவியரசரின் அந்தக் கோபக் குரலின் வெப்பத்தால். அது கூறிய மாபெரும் தியாகியின் மறைவுச் செய்தியால்; கண்ணீரும் பெருகியது.
ஆம், அச்சிறுவனின்  கண்களில் கண்ணீர் பெருகியது என்றால் அது ஒன்றும் பெரிய வியப்பாகாது.  வேறென்ன வியப்பு?....

ஒரு தேசக் காவலனின் மறைவுச்செய்தி. இன்னொரு, தேச  நேசனின் உள்ளக் குமுறல்களில் கவிதையாய் பிறந்து; அது கடைசியாக அன்று, அந்த பண்ணபுரத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண மனிதனை; இசைஞானியாய் உருவாக காரணமான முதல் பாடல் என்றால்; இசைஞானியை உருவாக்க கருவானது என்றால்; அது தான் பின்னாளில். இன்றும் வியப்பாய் நிற்கிறது.ஆம், அந்தப் பாடல் தான் இசைஞானி இளைய ராஜா அவர்கள் இசை அமைத்த முதல் பாடலாம்!!!.

அதை அவரே கூறுவதைக் கேட்க,
இந்த சுட்டியை முடுக்குங்கள். முத்துதிரும். ஆம் உங்கள் கண்களில் கண்ணீர் முத்துதிரும்.

---------------------------------------------------------------------------------------------------------------------

மேலே எழுதப் பட்டப் பாடல் இளையராஜா பாடுவதை கணினியில் கேட்கும் போது நான் எழுதியது. அதிலே கவிஞர் எழுதிய ஒரு வரியை அவர் நீக்கி அல்ல தவிர்த்து இருக்கிறார்."தெய்வமே உன்னையும் நாம் தேம்பி அழவையோமோ! என்ற வரி தாம் அது.

பொதுவுடைமை இயக்கத்தில் ஈடுபட்டப் போது, அன்று இந்த வரியை  பல மேடைகளிலே இளையராஜா அவர்கள் பாடி இருந்தாலும்; இன்று அவர் ஒரு முழு ஆன்மீக வாதி என்பதால்;
அம்மா என்று தரையில் எழுதப்பட்ட எழுத்தைக் கூட தனது காலில் மிதிக்க எப்படி மனம் ஒப்பாதோ! அப்படி அவருக்கு அந்த வரியைப் பாட அவர் மனம் ஒப்பவில்லை போலும்.

கவிஞரும் கொண்ட வேசத்திற்கு தகுந்தாற் போல் (ஏன் வேஷம் என்கிறேன் என்றால் அன்றைய சூழலில் புனைப் பெயரிலே பக்திப் பாடல்களையும் எழுதி இருக்கிறார் என்று கேள்வியுறுகிறேன்) அந்த வரிகளை கைகொள்கிறார்.
அந்தக் கருத்தை மறுப்பது என்றாலும், அவர் இறைவனிடம் தான் கொண்ட உரிமையில் கூட அப்படி எழுதி இருக்கலாம் என்றும் சொல்லத் துணியலாம்.

கவிஞர்களின் எண்ணமும், கருத்தும் அவர்கள் வாழும் காலத்தோடு மாறுபடும், இல்லை மேம்படும்.

அன்று இந்தியாவின் முதல் பிரதமரின் மறைவிற்கு ஒரு பெரும் கவிஞரால் எழுதப்பட்ட இரங்கல் பாட்டிற்கு தான், தனது முதல் இசை அமைத்தேன் என்று அந்த பதினேழு வயது சிறுவன் கூறினால் அது அப்போது நமக்கெல்லாம் சாதாரணம்.

ஆனால், இன்று ஒரு இசை ஞானி என்று பெரும்பாலான மக்களால்  அன்போடு அழைக்கும் தகுதி படைத்த ஒரு கலைஞன், அது தான் தனது முதல் இசை அமைத்தப் பாடல் என்பது தான் மேதைகளின் சங்கமத்தை / முக்கூடலைப் பற்றி சிந்திக்கச் செய்கிறது. கங்கையாய், யமுனையாய், சரஸ்வதியாய்.... மூவரும் இங்கே சங்கமித்தது தான் ஆச்சரியப் படச்செய்கிறது!

நாட்டிலோ !, வீட்டிலோ !!, காட்டிலோ !!!.....  தாமரைகள், அவைகள் எந்தச் சேற்றில் முளைத்தால் என்ன?

அவைகள்; நிறத்தால், அளவால் வேறுபட்டால் என்ன?. ஆனால், அவைகள்; அழகாலும், மணத்தாலும் ஒன்றல்லவோ!

எங்கோ பிறந்து; எப்படியெல்லாமோ வளர்ந்து; முப்பெரும் மேதைகளின் சங்கமம் எப்படி நடந்தேறியது!  இதுவே, என்னை பெரிய வியப்பாய் ஆழ்த்தியது.

அவனின்றி அணுவும் அசையாது; யாரை எதற்காகப் படைத்தானோ! அவர்கள் தாமாகவே தங்களது கடமைகளை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் / இருந்திருக்கிறார்கள்.

அது இந்த பரந்து விரிந்த ஆகாயமும், எரியும் சூரியனும், கொட்டும் அருவியும், வீசும் காற்றும், சுற்றும் பூமியும் மட்டுமல்ல. அதை, விரும்பினாலும் விரும்பா விட்டாலும்; இந்த மானுடமும் அப்படித்தான். அவர்கள் தாமாகவே தங்களது கடமைகளை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் / இருந்திருக்கிறார்கள்.

எல்லாவற்றிலும் எல்லாமமுமாக நீக்கமற நிறைத்திருக்கும் அவனே எல்லா அதிசயங்களையும் நடத்துகிறான். இந்த பிரபஞ்சத்தில் நடக்கும் யாவும் அவனின் செயலே என்ற சிந்தனையை மேல் நிறுத்துவோம். 

(இந்த எனது ஆக்கம் ஏற்கனவே வகுப்பறையில் வந்த பதிவின் மீள்பதிவு)
நன்றி வணக்கம். 
அன்புடன்,

தமிழ் விரும்பி.

4 comments:

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

"கவிஞர்கள் என்றாலே உணர்ச்சிக் கடலில் மூழ்கக் கூடியவர்கள். அவர்கள் நவரச உணர்வுகளின் எல்லைவரை அதாவது, நுனிவரை செல்பவர்கள். அவர்கள் மெல்லிய இதயம் கொண்டவர்கள். ஆனால், அவர்கள் பலவீனமானவர்கள் அல்ல. அவர்கள் எளிதில் காயப் படக் கூடியவர்கள், ஆனால், முழுச் சுரணையும் உள்ளவர்கள். அதோடு, அவர்கள் சுதந்திரமானவர்கள். புறக்கண்ணை மறந்து அகக் கண்ணாலே அதிகம் பார்ப்பவர்கள். ஏனென்றால், அதற்கு உண்மை மட்டுமே தெரியும்!

சத்தியமான வார்த்தைகள் ஆலாசியம் ஜி... அற்புதமான படைப்பு ..

சாவே உனக்கொரு நாள்
சாவு வந்து சேராதோ!

எத்தனை பேருக்காக இப்படி நினைக்கத் தோனும் ?

வாழ்த்துக்கள் தோழரே..

( இது மார்ச் 26 ல் நான் வகுப்பறையில் கொடுத்த கமண்ட்

இதையே இங்கும் தருகிறேன்.
ஹி..ஹி..ஹி

Unknown said...

//// சத்தியமான வார்த்தைகள் ஆலாசியம் ஜி... அற்புதமான படைப்பு ..

சாவே உனக்கொரு நாள்
சாவு வந்து சேராதோ!

எத்தனை பேருக்காக இப்படி நினைக்கத் தோனும் ?

வாழ்த்துக்கள் தோழரே..

( இது மார்ச் 26 ல் நான் வகுப்பறையில் கொடுத்த கமண்ட்

இதையே இங்கும் தருகிறேன்.
ஹி..ஹி..ஹி////

வருகைப் பதிவிற்கும்
மீண்டும் வகுப்பறைக்கே
சென்று அதே பின்னூட்டத்தை
தேடித் பிடித்து
அச்செடுத்துக் கொண்டு
வந்து ஒட்டியதற்கும்.
நன்றிகள் நண்பரே.

Unknown said...

கவியரசு கண்ணதாசன் தனக்கென
ஒப்பாரும், மிக்காரும் இல்லா தனியரசு
ஐயமில்லை
அவரைப் பற்றிய இப் பதிவு பாராட்டுக்கு
உரியது
புலவர் சா இராமாநுசம்

Unknown said...

////புலவர் சா இராமாநுசம் சொன்னது…
கவியரசு கண்ணதாசன் தனக்கென
ஒப்பாரும், மிக்காரும் இல்லா தனியரசு
ஐயமில்லை
அவரைப் பற்றிய இப் பதிவு பாராட்டுக்கு
உரியது
புலவர் சா இராமாநுசம்////

தங்களின் வருகைக்கும்
மேலானக் கருத்துப் பகிர்வுக்கும்
நன்றிகள் ஐயா!

Post a Comment