பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.

Wednesday 13 July 2011

கடவுளை கண்டுணர என்ன வேண்டும்?



(விவேகானந்தரின் பார்வையில் வேதாந்தம் பகுதி ஒன்றை சென்ற பதிவில் கண்டோம். அடுத்தப் பதிவில் அதன் இரண்டாம் பகுதியைப் பார்ப்போம். அதற்கிடையில் சில விவரங்களையும் அறிந்துக் கொண்டு போவது நல்லது என்று எண்ணியதால் இந்தப் பதிவு.  சரி வாருங்கள் மேலேப் போகலாம்.)

ஒருமுறை பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி தனது ஆசரமத்திற்கு வந்த சிலரோடு அமர்ந்து வேத, உபநிடத சம்பந்தமான விசயங்களைப் பற்றிப் வெகுநேரம் உரையாடிக் கொண்டிருந்தாராம். வந்திருந்தவர்களும் பகவான் ரமணரிடம் பல சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவுற்றும் இருந்திருக்கிறார்கள்.

அப்போது அங்கு நடந்த சம்பாசனைகளைக் கேட்டுக் கொண்டு ஒரு ஓரமாக ஆசரம உதவியாளர் ஒருவர் நின்றுக் கொண்டிருந்திருக்கிறார். 
சிறிது நேரத்தில் வந்தவர்கள் எல்லோரும் பகவான் ரமணரிடம் ஆசி பெற்று புறப்பட்டு சென்று விட்டார்கள். 

அங்கு ஓரமாக நின்றுக் கொண்டிருந்த அந்த உதவியாளரை நோக்கி, உன் கவலை எனக்கு புரிகிறது, கவலைப் படாதே இது போன்ற வேத, உபநிடத அறிவுகள் இருந்தால் தான் கடவுளை உணர முடியும் என்று அல்ல. அதே போன்று இப்படி வேத, உபநிடத அறிவுள்ளோர் அனைவரும் பகவானைக் காண்பார்கள் என்பதும் உறுதியல்ல.

இது கடவுளைப் பற்றிய அறிவு மாத்திரமே. பகவானை அடைய முயல்வது வேறு. ஆக நீ வீணானக் கவலைக் கொள்ளவேண்டாம் என்றாராம்.

பகவான் ஸ்ரீ ரமணர் தனதருகே நின்ற அந்த உதவியாளரின் எண்ண ஓட்டத்தை அறிந்து அவர் கேட்காமலே அவரின் கவலைக்கு தீர்வை அளித்தது, அந்த உதவியாளரைப் போலவே நமக்கு அதிசயமாக தோன்றினாலும், பகவானின் அந்தக் கருத்து அந்த உதவியாளருக்கு மாத்திரம் அல்ல, நம்மைப் போன்ற யாவருக்குமாக கூறியதாகவே கொள்ள வேண்டும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த நிகழ்வுகளுக்கு முன்னாள் இதைப் பற்றி நமது மகாகவி பாரதி தனது காமதேனு என்னும் கட்டுரையிலே மிகவும் அழகாக எழுதியிருக்கிறார், அந்தக் கட்டுரை நான் சமீபத்தில் பாரதி பயிலகத்தில்   படித்தேன் அதிலே ஒரு சில பகுதிகளை இங்கே கொடுத்துள்ளேன் அதைப் பார்ப்போம்.

"வாசக ஞானம்
வியாபாரம், கைத்தொழில், ராஜாங்கச் சீர்திருத்தம், ஜன சமூகத் திருத்தம் முதலிய லெளகிக விவகாரங்கள் எல்லாவற்றிலும் மனிதர் ஏறக்குறைய எல்லாத் திட்டங்களையும் உணர்ந்து முடித்து விட்டனர்.

ஒரு துறை அல்லது ஓர் இலாகாவைப் பற்றிய ஸூக்ஷம தந்திரங்கள் மற்றொரு துறையில் பயிற்சி கொண்டோர் அறியாதிருக்கலாம். ஆனால், அந்த அந்த நெறியில் தக்க பயிற்சி கொண்ட புத்திமான்களுக்கு அதனையதனைப் பற்றிய நுட்பங்கள் முழுமையும் ஏறக்குறைய நன்றாகத் தெரியும்.

பொதுவாகக் கூறுமிடத்தே, மனித ஜாதியார் அறிவு சம்பந்தப்பட்டமட்டில் மஹா ஸூக்ஷமமான பரம சத்தியங்களை யெல்லாம் கண்டுபிடித்து முடித்து விட்டனர்.

ஆனால் அறிவுக்குத் தெரிந்ததை மனம் மறவாதே பயிற்சி செய்ய வலிமையற்றதாய் நிற்கிறது. அறிவு சுத்தமான பின்னரும், சித்தசுத்தி ஏற்பட வழி இல்லாமல் இருக்கிறது. எனவே அறிவினால் எட்டிய உண்மைகளை மனிதர் ஒழுக்கத்திலே நடத்திக் காட்டுதல் பெருங் கஷ்டமாக முடிந்திருக்கிறது.

ஆத்ம ஞானத்தின் சம்பந்தமாகக் கவனிக்குமிடத்தே, இந்த உண்மையைத் தாயுமானவர்

"
வாசக ஞானத்தினால் வருமோ ஸுகம் பாழ்த்த
பூசலென்று போமோ புகலாய் பராபரமே"


என்ற கண்ணியில் வெளியிட்டிருக்கிறார்.

இதன் பொருள் 'வெறுமே வாக்களவாக ஏற்பட்டிருக்கும் ஞானத்தினால் ஆனந்தமெய்த முடியவில்லையே! என் செய்வோம்? பாழ்பட்ட மனம் ஓயாமல் பூசலிட்டுக் கொண்டிருக்கிறதே? இந்தப் பூசல் எப்போது தீரும்? கடவுளே, நீ அதனைத் தெரிவிப்பாய்' என்பதாம்.

இதே உண்மையை உலக நீதி விஷயத்தில் ஏற்கும்படி திருவள்ளுவர்

"
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்"


என்ற குறளால் உணர்த்துகிறார். இதன் பொருள் "வாயினால் ஒரு தர்மத்தை எடுத்துச் சொல்லுதல் யாவர்க்கும் சுலபமாக ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அந்தச் சொல்லின்படி நடத்தல் மிகவும் துர்லபம்" என்பது."
-------------------------------------------------------------------

இந்த காமதேனு மடி சுரக்கும் அறிவுப்பால் தேனமுதாய் பெருக்கெடுத்து ஓடுகிறது. பாரதி அவ்வளவு அற்புதமாக எழுதியுள்ளான். தமிழ் =  அறிவுத் தாகம் கொண்ட யாவரும் சென்றுப் பருக உங்களை வேண்டிக் கொள்கிறேன்.

இங்கே சில பகுதியை மட்டும் தரவும் விரும்புகிறேன்.
V
V
V

"உண்மை (ரத்தினக் களஞ்சியம்)
பூமண்டலத்தில் வெவ்வேறு தேசங்களில் வெவ்வேறு காலங்களிலே பிறந்து, மனுஷ்ய ஜாதியாருக்கு ஞானதானம் செய்த சில பெரியோரின் வசனங்களை இங்கே கோத்தெழுதுகிறேன். தயவுசெய்து சிரத்தையுடன் படிக்கும்படி தமிழ்நாடு ம
காஜனங்களை வேண்டுகிறேன்.

தெலுங்கு தேசத்து ஞானியாகிய வேமன்ன கவி சொல்லுகிறார்:-

"
கல்லைக் குவித்துப் பெரிய கோவில்கள் ஏன் கட்டுகிறீர்கள்?" தெய்வம் உள்ளுக்குள்ளே இருப்பதை அறியாமல், வீணாக ஏன் தொல்லைப் படுத்துகிறீர்கள்?"

ஸ்வாமி விவேகானந்தர்:- "ஒவ்வொரு மனிதனுடைய அறிவிலும் பரமாத்மா மறைந்து நிற்கிறது. வெளியுலகத்தையும் உள்ளுலகத்தையும் வசப்படுத்தி உள்ளே மறைந்திருக்கும் தெய்வத்தை வெளிப்படுத்துவதே நாம் செய்ய வேண்டிய காரியம்.

செய்கை, அன்பு, யோகம், ஞானம் இவற்றினால் அந்தப் பொருளை அடைந்து விடுதலை பெற்று நில்லுங்கள். தர்மம் முழுதும் இஃதேயாம். மற்றப்படி மதங்கள், கொள்கைகள், கிரியைகள், சாஸ்திரங்கள், கோயில்கள், ஆசாரங்கள் எல்லாம் இரண்டாம் பக்ஷமாகக் கருதத்தக்க உபகரணங்களேயன்றி வேறில்லை."

அமெரிக்கா தேசத்து மஹா வித்வானும் ஞானியுமாகிய எமர்ஸென் சொல்லுகிறார்:-

"
எவன் வந்தாலும் சரி, அவனிடமுள்ள தெய்வத்தை நான் பார்ப்பதற்கு தடையுண்டாகிறது. ஒவ்வொருவனும் தன்னுள்ளேயிருக்கும் திருக்கோயிலின் கதவுகளை மூடி வைத்துவிட்டு மற்றொருவனுடைய தெய்வத்தையும், மற்றொருவனுக்கு வேறொருவன் சொல்லிய தெய்வத்தையும் பற்றிப் பொய்க் கதைகளை என்னிடம் சொல்ல வருகிறான்."

த்ஸென் தஸே த்ஸுங் என்ற சீன தேசத்து ஞானி சொல்லுகிறார்:-

"
பழைய காலத்திலிருந்து வந்ததென்று கருதி, ஒரு மதம் உண்மையென்பதாக நிச்சயித்து விடலாகாது. உண்மை இதற்கு நேர் மாறானது. மனித ஜாதி நாளாக நாளாக வாழ்க்கையின் உண்மை விதிகளை நன்றாகத் தெரிந்து கொள்ளுகிறது.

நமது பாட்டன்மாரும் பூட்டன்மாரும் நம்பிய விஷயங்களையே நாமும் நம்ப வேண்டுமென்ற விஷயமானது குழந்தையாக இருக்கும்போது தைத்த உடுப்புகளையே பெரியவனான போதும் போட்டுக் கொள்ள வேண்டுமென்பதற்கு ஒப்பாகும்."

மேற்கூறிய எமெர்ஸென் பண்டிதரின் சிஷ்யரும் நல்ல ஞானியுமான தோரோ சொல்லுகிறார்:

"
என்ன ஆச்சரியம்! உண்மையின் பிரகாசங்களில் நமது காலத்துக்குப் பயன்படாத பழையனவற்றை உலகம் ஒப்புக் கொள்ளுகிறது. இப்போது புதிய ஞானிகள் கண்டு சொல்லும் உண்மைகளை வீணாக மதிக்கிறது. சிற்சில சமயங்களில் பகைக்கவும் செய்கிறது. என்ன ஆச்சரியம்!"

ராமகிருஷ்ண பரமஹம்ஸர்:-

"
ஆச்சரிய சித்திகள் காட்டுவதாகச் சொல்லும் மனிதர் இருக்குமிடத்துக்குப் போக வேண்டாம். அவர்கள் உண்மை நெறியினின்றும் தவறிவிட்டார்கள்."

ருஷியா தேசத்து ஞானியாகிய டால்ஸ்டாய் (தோல்ஸ்தோய்):-

"
நமது மதக் கொள்கைகளில் பயனில்லாதது, ஜடமாவது, புறவடிவமாவது, தெளிவில்லாதது, நிச்சயமில்லாதது - இவற்றை நாம் பயனில்லாமல் தள்ளிவிட வேண்டும். அதன் ஸாரத்தை மாத்திரம் கொள்ள வேண்டும். எத்தனைக் கெத்தனை இந்த ஸாரத்தை நாம் சுத்தப்படுத்து கிறோமோ, அத்தனைக்கத்தனை ஜகத்தின் உண்மை விதி நமக்குத் தென்படும்."

--------------------------------------------------------------------------------------------

எது தெய்வம்?

'
ஹெர்மெஸ்' என்ற புராதன மிசிர (எகிப்து) தேசத்து ஞானி சொல்லுகிறார்:- 

"
உடலில்லாதது, தோற்றமில்லாதது, வடிவமற்றது, ஜடமில்லாதது, நமது புலன்களுக்கு எட்டாதது - இது தெய்வம்."

ராமகிருஷ்ண பரமஹம்ஸர்:- "ஈசன் ஒளி; எல்லாப் பொருள்களிலும் திரைக்குள் மறைந்ததுபோல் மறைந்து நிற்கும் ஒளியே தெய்வம்."

பட்டினத்துப் பிள்ளை:- "எட்டுத் திசையும் பதினாறு கோணமும் எங்குமொன்றாய் முட்டித் ததும்பி முளைத்தோங்கும் ஜோதி."

தாயுமானவர்:- "சுத்த அறிவே சிவம்."

ரிக் வேதம்:- "உண்மைப் பொருள் ஒன்று. அதனைப் புலவோர் பலவாறு சொல்லுகிறார்கள்."

நம்மாழ்வார்:- "திடவிசும்பு, எரி, வளி, நீர், நிலம் இவை மிசைப்படர் பொருள் முழுவதும் ஆய், அவையவை தோறும் உடல்மிசை உயிரெனக் கரந்துளன்."

ஹெர்மெஸ்:- "தெய்வம் எது? ஜகத்தின் உயிர்."

எனவே, எல்லா மதங்களும் உண்மைதான்; ஒரு மதமும் முழு உண்மையன்று. ஆதலால் மதப்பிரிவுகளைக் கருதி மனிதர் பிரிந்து விடக்கூடாது. எல்லா மதஸ்தரும் ஒரே தெய்வத்தைத்தான் வணங்குகிறார்கள். லெளகிக விஷயங்களைப் போலவே மத விஷயங்களிலும் ஒப்பு, உடன்பிறப்பு, விடுதலை மூன்றும் பாராட்ட வேண்டும்."
-----------------------------------------------------------------

ஒப்பு என்பது நான் யாவரும் சமம். உடன்பிறப்பு என்பது சகோதரம், விடுதலை என்பது சுதந்திரம். ஆக, சமத்துவம - சகோதரத்துவம் - சுதந்திரம் இவைகள் பாரதி இந்த மானுடத்திற்கு விட்ட வேண்டுகோள்.

நம்பிக்கைவை என்று இப்படி கூறுகிறான்...


"........... தெய்வத்தினிடம் உண்மையுடன் கேட்டால் அது கொடுக்கும். தெய்வம் கொடுக்கா விட்டாலும் அதை நம்ப வேண்டும். பக்தி பக்குவமடைந்த பிறகுதான் கேட்ட வரம் உடனே கிடைக்கும். அதுவரை தாமஸங்கள் உண்டாகும். இது கர்ம விதி.

'அடுத்து முயன்றாலும் ஆகுநாளன்றி எடுத்த கருமங்கள் ஆகா.'

எனவே, நாம் தெய்வத்திடம் கேட்ட பயன் கைகூடுவதற்கு எத்தனை காலமான போதிலும் அதைரியப்படாமல், தெய்வ பக்தியையும், அதனால் உண்டாகும் ஊக்கத்தையும் முயற்சியையும் துணையாகக் கொண்டு நடக்க வேண்டும். விதியின் முடிவுகளைத் தெய்வ பக்தி வெல்லும். இந்த உலக முழுமைக்கும் ஈசனே தலைவன்.

அவனும் பக்தர்களுக்கு வசப்பட்டவன். பக்தன் எது கேட்டாலும் கைகூடும். நம்பு; கேள்; ஓயாமல் தொழில்செய்து கொண்டிரு. பயனுக்கு அவசரப்படாதே, தெய்வம் நிச்சயமாக வரம் கொடுக்கும்......."
--------------------------------------------------------------------------------------------------------------------------------------

துணிவே அறிவு, துணிவில்லா அறிவு வீண் என்றும் துணிவு கொண்டான் கல்லாதவன் என்றாலும் அவனை ஞானி என்கிறான் பாரதி. இதோ பாருங்கள் சில வரிகள்.

 " ................ துணிவுள்ளவனையே அறிவுள்ளவ னென்பதாக நமது முன்னோர்கள் மதிக்கிறார்கள். எடுத்ததற்கெல்லாம் அஞ்சும் இயல்புடைய கோழையொருவன் தன்னைப் பல சாஸ்திரங்கள் கற்றவன் என்றும் அறிவாளியென்றும் சொல்வானானால், அவனை நம்பாதே! அவன் முகத்தை நோக்கிக் காறியுமிழ்ந்துவிட்டு, அவனிடம் பின்வருமாறு சொல்:- "அப்பா, தீ ஏட்டைத் துளைக்கும். ராமபாணப் பூச்சியைப் போல், பல நூல்களைத் துளைத்துப் பார்த்து ஒருவேளை வாழ்நாளை வீணாக்கியிருக்கக்கூடும்.

ஆனால், அச்சம் இருக்கும் வரை நீ அறிவாளியாக மாட்டாய். அஞ்சாமைக்கும் அறிவுக்கும் நமது முன்னோர்கள் ஒரே சொல்லை உபயோகப்படுத்தி யிருக்கிறார்கள். அதை நீ கேள்விப்பட்டதில்லை போலும்.

ஆம். அச்சமே மடமை. அச்சமில்லாமையே அறிவு. விபத்துக்கள் வரும்போது நடுங்குபவன் மூடன். அவன் எத்தனை சாஸ்திரம் படித்திருந்தாலும் மூடன்தான்.
விபத்துக்கள் வரும்போது, எவன் உள்ளம் நடுங்காமல் துணிவுடன் அவற்றையெல்லாம் போக்க முயற்சி செய்கிறானோ, அவனே ஞானி. 'ஹரி; ஓம்' என்று எழுதத் தெரியாத போதிலும் அவன் ஞானிதான்............................."
-------------------------------------------------------------------

நமக்கு எண்ண வேண்டும் அதை எப்படிப் பெறவேண்டும் என்பதை ஜகதீஸ் சந்திர போஸ் அவர்களின் விருப்பத்தையும் தனது கட்டுரையில் கொண்டளிக்கிறார் பாரதி....



"..........................................இப்போது நம்முடைய கண்முன்னே இரண்டு விதமான தர்மங்கள் காணப்படுகின்றன.

"
முதலாவது (ஐரோப்பியரைப் போல நாமும் படிப்பின் பரவுதலாலும், நகரத்தானுக்குரிய கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுவதாலும், கைத்தொழில், வியாபார சம்பந்தமான பலவித முயற்சிகளாலும், பாரத நாட்டை வலிமையுடைய நாடாகச் செய்ய வேண்டும். இவையெல்லாம் தேசக் கடமையின் முக்கியாம்சங்கள்.


இவற்றைப் புறக்கணித்தால் நமது ஜீவனுக்கே ஆபத்து நேரிடும். வாழ்க்கையிலே ஜயமும், அவனவன் தந்தன் அவாவைத் திருப்தி செய்து கொள்ளும் வழியும் வேண்டிப் பாடுபட்டால் அதிலிருந்தே மேற்கூறிய லெளகிக தர்மத்திற்குத் தூண்டுதல் உண்டாகும்.

இரண்டாவது, ஆத்ம தர்மம் க்ஷணமாயிருக்கும் இன்பங்களை மாத்திரம் கருதாமல், மனுஷ்ய வாழ்க்கையின் அதியுந்நதமான நோக்கத்தை நாடி உழைத்தவர்கள், நமது நாட்டில் எக்காலத்திலும் மாறாமல் இருந்து வருகிறார்கள்..................."
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

சரி நாம் பயனுற்றால் போதுமா இந்தவையகம் பயனுரவேண்டுமே அப்படி என்றால் ஐரோப்பாவுக்கு எண்ண வேண்டும் என்கிறான் பாருங்கள்....

".............வந்தேமாதரம்
இதுவே உயிரின் ஒலி. ஹிந்துஸ்தானத்தை வணங்குகிறேன். ஹிந்து தர்மத்தைப் போற்றுகிறேன். லோக நன்மைக்காக என்னை மறந்து என்னை இரை கொடுப்பேன்.

இதுதான் ஜீவசக்தியின் சாந்தி வசனம். தர்மம் ஐரோப்பியருக்குத் தெரியாது. அதை நாம் ஐரோப்பியருக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்களுடைய முயற்சிகளை நாம் கற்றுக் கொண்டு, பிறகுதான் அவர்களுக்கு நாம் உபாத்யாயராகலாம்.

ஐரோப்பாவின் தொழில் நுபங்களை நாம் பயிற்சி செய்தல் எளிதென்பது ஸ்ரீமான் வஸுவின் சரிதையிலே நன்கு விளங்கும். நம்முடைய சாந்தி தர்மத்தை ஐரோப்பியர் தெரிந்து கொள்வதால், அவர்களுக்கு விளையக்கூடிய நன்மையோ மிகமிகப் பெரியது................................."
----------------------------------------------------------------------------------------------------------------------------------

கடைசியாக கட்டுரையின் முடிவிலே எது மரணமில்லா அமிர்தம் என்பதையும் ஜகதீஸ் சந்திர போசின் வார்த்தைகளோடு கட்டுரையை இப்படி நிறைவு செய்கிறார்.

"...................முன்னொரு முறை சில வருஷங்களுக்கு முன்பு ஜகதீச சந்திரர் சொல்லிய வாக்கியமொன்றையும் இங்கு மொழிபெயர்த்துக் காட்டுதல் பொருந்தும். லண்டன் நகரத்தில் 'ராயல் சொசைட்டி' என்ற பெரிய சாஸ்திர சங்கத்தார் முன்பு செய்த பிரசங்க மொன்றிலே அவர் சொன்னார்:-
"ஸ்வலி கீதங்களின் பேசாத ஸாக்ஷ்யத்தை நான் பார்த்தேன். எல்லாப் பொருளையும் தன்னுள்ளே கொண்ட ஏகவஸ்துவின் கலை ஒன்றை அங்கு கண்டேன்.

ஒளியின் சிறு திரிகளுக்கிடையே தத்தளிக்கிற துரும்பும் பூமியின் மேலே பொதிந்து கிடக்கும் உயிர்களும், நமது தலைமேலே சுடர் வீசும் ஞாயிறும் - எல்லாம் ஒன்று. இதைக் கண்ட பொழுதே, மூவாயிர வருஷங்களுக்கு முன்பு என் முன்னோர் கங்கைக் கரையில் முழங்கின வாக்கியத்திற்குச் சற்றே பொருள் விளங்கலாயிற்று.

'இந்த ஜகத்தின் பேத ரூபங்களில் ஒன்று, காண்பார் எவரோ அவரே உண்மை காண்பார், பிறர் அல்லர், பிறர் அல்லர், இதுதான் ஜீவ ஒலி.

வாயுபகவானுடைய ஸ்ரீமுக வாக்யம். எல்லாவற்றிலும் ஓருயிரே அசைகிறது. அதை அறிந்தால் பயமில்லை; பயம் தீர்ந்தால் சாவில்லை. அமிர்தம் ஸதா." 

அது சரி எங்கே இந்தக் கட்டுரையை முழுதாகப் படித்து தெளிவது என்று கேட்கும் சகோதர சகோதிரிகளுக்கு இந்த சுட்டி.

சென்று படித்து இன்புருக....
"யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்"
ஞானிகளின் சித்தனைகள் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும் ஏனென்றால் அது உண்மை.  உண்மைக்கு ஒரே வடிவம் தானே.

நன்றி: பாரதி பயிலகம்.

நன்றி வணக்கம்,

அன்புடன்,

தமிழ் விரும்பி.







10 comments:

vidivelli said...

அழகான கருத்து நிறைந்த பதிவு..
வாழ்த்துக்கள்...



can you come my said?
http://sempakam.blogspot.com/

Unknown said...

விடிவெள்ளி அவர்களே தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
தங்களின் பதிவைப் பார்த்தேன்....
வெகுதூரம் இல்லை அங்கே விடிவெள்ளி முளைக்க...

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

தெளிவாகப் புரிந்தாலே சித்தாந்தம் - அது
புரியாமல் போனாலே வேதாந்தம்..

தவறாக நினைக்காதீர்கள் எனக்கு வேறு சொல்லத் தோணவில்லை..

மன்னிக்க.

சிவயசிவ said...

வணக்கம் தமிழ் விரும்பி அவர்களே!

கொஞ்சம் நடையை மாற்றுங்கள்.சற்று கடினமாக இருக்கிறது.

எல்லோரும் வேதாந்தத்தையும் பாரதியையும் முழுமையாகப் புரிந்துகொண்டவர்கள் அல்லர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டுகிறேன்.

நன்றி.

http://sivaayasivaa.blogspot.com/

Unknown said...

////சிவ.சி.மா. ஜானகிராமன் சொன்னது…
தெளிவாகப் புரிந்தாலே சித்தாந்தம் - அது
புரியாமல் போனாலே வேதாந்தம்..

தவறாக நினைக்காதீர்கள் எனக்கு வேறு சொல்லத் தோணவில்லை..

மன்னிக்க////

அன்புடன் வணக்கம்,
தவறொன்றும் இல்லை... அன்பரே!

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்.

Unknown said...

////சிவ. வே. கங்காதரன் சொன்னது…
வணக்கம் தமிழ் விரும்பி அவர்களே!

கொஞ்சம் நடையை மாற்றுங்கள்.சற்று கடினமாக இருக்கிறது.

எல்லோரும் வேதாந்தத்தையும் பாரதியையும் முழுமையாகப் புரிந்துகொண்டவர்கள் அல்லர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டுகிறேன்.

நன்றி.///

அன்புடன் வணக்கம்,
சரி முயற்சிக்கறேன் தோழரே!
தங்களின் பின்னூட்டத்திற்கும்,
ஆலோசனைக்கும் நன்றிகள்...

Unknown said...

நல்ல பதிவு, நல்ல கருத்துக்கள்,ஆனால்...
சுருங்கச் சொல்லி விளங்க வைக்க
வேண்டுகிறேன். இன்றைய உலகம் அவசர
உலகம் எங்கும் விரைவு, எதிலும் விரைவு
உண்ணும் உணவுகூடமே விரைவு
கூடமாக மாறிவிட்டதே
அறிவுரை அல்ல ஆலோசனை கூட அல்ல
வேண்டுகோள் மீண்டும் சந்திப்போம்
புலவர் சா இரமாநுசம்

Unknown said...

////புலவர் சா இராமாநுசம் சொன்னது…
நல்ல பதிவு, நல்ல கருத்துக்கள்,ஆனால்...
சுருங்கச் சொல்லி விளங்க வைக்க
வேண்டுகிறேன். இன்றைய உலகம் அவசர
உலகம் எங்கும் விரைவு, எதிலும் விரைவு
உண்ணும் உணவுகூடமே விரைவு
கூடமாக மாறிவிட்டதே
அறிவுரை அல்ல ஆலோசனை கூட அல்ல
வேண்டுகோள் மீண்டும் சந்திப்போம்////

அன்புடன் வணக்கம்,
தங்களின் வருகைக்கு நன்றிகள் ஐயா!
தாங்கள் கூறியதை ஏற்கிறேன் அப்படியே
முயற்சியும் செய்கிறேன்.
நன்றி...

Anonymous said...

தம்பி வணக்கம்,
கட்டுரையில் உள்ள தகவல்களுக்கு நன்றி. சிவ கங்கா கூறியது சரி என்றாலும், ஆழமான விடயங்களை ஓரளவுக்குமேல் எளிமைப்படுத்த முடியாது என்பதை விருப்பின்றி ஏற்கின்றவன்.
நாம் பக்குவப்பட்டால் எதுவும் எளிமையாகும்.
எம்மால் புரிவது சிரமமாயினும் விளங்கக் கூடியவர்கட்கு நல்ல தகவல்கள்.
புரிய முயலுவோம்; எம்மால் முடியும் என்று முயல வேண்டும்.
கிருஸ்ணர்

Unknown said...

////பெயரில்லா சொன்னது…
தம்பி வணக்கம்,
கட்டுரையில் உள்ள தகவல்களுக்கு நன்றி. சிவ கங்கா கூறியது சரி என்றாலும், ஆழமான விடயங்களை ஓரளவுக்குமேல் எளிமைப்படுத்த முடியாது என்பதை விருப்பின்றி ஏற்கின்றவன்.
நாம் பக்குவப்பட்டால் எதுவும் எளிமையாகும்.
எம்மால் புரிவது சிரமமாயினும் விளங்கக் கூடியவர்கட்கு நல்ல தகவல்கள்.
புரிய முயலுவோம்; எம்மால் முடியும் என்று முயல வேண்டும்.
கிருஸ்ணர்////

வணக்கம் அண்ணா,

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் அண்ணா.

Post a Comment