பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.

Friday 21 October 2011

உன்மத்தமாக இனி இங்கு யாருமில்லை…



ஓ... அந்தி மந்தாரையே
அதிசயம் என்ன இன்று...
அதிகாலையே மலர்ந்து விட்டாயே!

நேற்றைய பொன் அந்தி 
மாலைபொழுதில்
உன் அருகே வந்து போன
என் அழகி, அவளின்
முந்தானைக் காற்றில் 
உன் தூக்கத்தையே 
தொலைத்தாயோ?...

தூக்கம், நானும் மறந்தே 
பலதினங்கள் ஆயினவே...
பைந்தொடி, அழகி பசுங்கொடி
அவள்மடி கிடைக்கும் வரை
அடியேனும் உன் கதியே!....


அடடா! செந்தாமரையே 
என்ன?
செருக்கோடு நிற்கின்றாய்...
நின் செந்நிறம் பெரிதென்றா?
இல்லை
மென்னிதழ் பெருமை யென்றா?...

இன்னும் சில நொடியே!
விண்ணில் வரும்
தேவதையைப் போல்
வைகைப் புனல் குளிர்த் 
தென்றலைப்போல்
வசந்தமகள் சுகந்தமான
மணம்பரப்பி....

செவ்விதழ் ஒளிர கதிர்ப் 
பொன்னொளியில் 
குளித்து எழுந்த,
கொட்டும் அருவி போன்றே

என் உயிரின் உயிரான 
தங்கத் தாமரை

அவள் 
அன்னம் தோற்கும் அழகுநடை
பயின்று வந்திடுவாள்...

அப்போது பார்ப்போம்....
ஓடப்போவது உன் செருக்கா?  
இல்லை
வெட்கி கூனிக் குறுகி 
உடையப் போவது
உன் குறுக்கா என்றே....


சோலைக் கருங் குயிலே 
காலை மாலை என்றே 
அனைத்து வேளையிலும்
உன் கானம் பொழிந்தே
இசைக்கு ஒரு குயிலெனவே
ஏற்றம் கொண்டாய்….
ஐயோ! பாவம்...
இனி உன் சம்பம் ஆகாது..

பிள்ளைத் தமிழ் பேசி -பசுங் 
கிள்ளை ஒன்று...
கொஞ்சும் மொழியோடு 
கொடி இடை தனிலே
இரு கனி சுமந்து

செவ்வாய் ஓரம் 
அமுது ததும்பும் அழகுடன்,
வண்ண மயில் போல….




தேவதையோ! இவள் என்றே..
விண்ணவரும் மயங்கிடவே
பெண்ணொருத்தி வருகிறாள்
என்னோடு கொஞ்சிக்
களித்திடவே….

உயிரினில் தேன் கலந்தே
உலகையே மறக்கடிக்கும்
அமுதப் பண் படைப்பாள்

ஆகவே,
இளங்குயிலே உன்
எண்ணமதை தேற்றிக்கொள்
எழில் நங்கை அவளே 
இனி இங்கே இசையரசி....

சந்தம் கொண்டே நீ பாடினால்
சத்தம் என்றே இனி உரைப்பார்
நித்தமும் நின் கானம் கேட்டவரே!

உன்மத்தமாக  இனி
இங்கு யாருமில்லை…

குற்றம் ஒன்றும் இல்லை 
கும்பிட்டே பணிந்து நில் 
மன்றம் வருபவளை - உன்
மனதாரப் பாராட்டிச் செல்...


அன்புடன்,
தமிழ் விரும்பி.



9 comments:

SURYAJEEVA said...

கல்யாணமா? வாழ்த்துக்கள்

SP.VR. SUBBIAH said...

////தேவதையோ! இவள் என்றே..
விண்ணவரும் மயங்கிடவே
பெண்ணொருத்தி வருகிறாள்
என்னோடேக் கொஞ்சிக்
களித்திடவே…./////

எழுத்துப் பிழை: என்னோடேக்’ என்பதை என்னோடு என்று மாற்றுங்கள் ஆலாசியம்

Unknown said...

///suryajeeva சொன்னது…
கல்யாணமா? வாழ்த்துக்கள்////

இந்தக் கனவுகள் யாவும் இருபது வருடங்களுக்கு முந்தியது...
கனவு தானே... எப்போது வேண்டுமானாலும் காணலாம் தானே நண்பரே!
தங்களின் வருகைக்கு நன்றிகள் நண்பரே!

Unknown said...

////SP.VR. SUBBIAH சொன்னது…
////தேவதையோ! இவள் என்றே..
விண்ணவரும் மயங்கிடவே
பெண்ணொருத்தி வருகிறாள்
என்னோடேக் கொஞ்சிக்
களித்திடவே…./////

எழுத்துப் பிழை: என்னோடேக்’ என்பதை என்னோடு என்று மாற்றுங்கள் ஆலாசியம்////

ஆஹா! தங்களின் வருகை எனக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது ஆசிரியரே!
இதோ பிழையைத் திருத்தி விட்டேன் ஐயா!
நேரம் கிடைக்கும் போதெல்லாம் வரவேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.
நன்றிகள் ஐயா!

Unknown said...

பொதுவா புரியாத விஷயத்துலே ஏன் தலைய வுட்டுக்கிட்டுன்னு நான் இந்த கவிதை பக்கமே ஆப்சென்ட் ஆயுடுறது..

ஆனா இன்னிக்கு உங்க கவிதை..பொறுமையாப் படிச்சேன்..ஈசியா இருந்துச்சு படிக்க..ரசித்துப் படிக்க முடிஞ்சது..

அந்திமந்தாரை, செந்தாமரை, சோலை கருங்குயில் என்று எல்லோரையும் ஓரங்கட்டி அப்படி உங்களைக் கவர்ந்த நாயகி யாரென்று பார்த்தேன்..வேறு ஏதோ ஒரு ஓவியனின் நாயகியை இங்கே செருகியிருக்கிறீர்கள்..தீபாவளி பட்டாசு உங்கள் தலையிலே வேடிக்கப்படாமல் இருக்க இந்த முன் ஜாக்கிரதை உணர்வு அவசியம்தான்..

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

kmr.krishnan said...

'காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்' என்றெல்லவா இருக்கு கவிதை!ரொம்ப சுளுவா!

மேலும் எழுதுங்கள்.பாராட்டுக்கள்.

Unknown said...

////minorwall சொன்னது…
பொதுவா புரியாத விஷயத்துலே ஏன் தலைய வுட்டுக்கிட்டுன்னு நான் இந்த கவிதை பக்கமே ஆப்சென்ட் ஆயுடுறது..

ஆனா இன்னிக்கு உங்க கவிதை..பொறுமையாப் படிச்சேன்..ஈசியா இருந்துச்சு படிக்க..ரசித்துப் படிக்க முடிஞ்சது..

அந்திமந்தாரை, செந்தாமரை, சோலை கருங்குயில் என்று எல்லோரையும் ஓரங்கட்டி அப்படி உங்களைக் கவர்ந்த நாயகி யாரென்று பார்த்தேன்..வேறு ஏதோ ஒரு ஓவியனின் நாயகியை இங்கே செருகியிருக்கிறீர்கள்..தீபாவளி பட்டாசு உங்கள் தலையிலே வேடிக்கப்படாமல் இருக்க இந்த முன் ஜாக்கிரதை உணர்வு அவசியம்தான்..

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
௨௬ அக்டோபர், ௨௦௧௧ ௫:௪௭ முற்பகல் ////
நன்றிகள் நண்பரே!
வேலைப் பழு... அதனால், எங்களது தாமதமான தீபாவளி நல்வாழ்த்துக்களை தங்களுக்கும், தங்களின் குடும்பத்தாருக்கும் கூறிக் கொள்கிறேன்.

Unknown said...

///kmr.krishnan சொன்னது…
'காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்' என்றெல்லவா இருக்கு கவிதை!ரொம்ப சுளுவா!

மேலும் எழுதுங்கள்.பாராட்டுக்கள்.
௩௧ அக்டோபர், ௨௦௧௧ ௬:௦௬ முற்பகல்////

நன்றி கிருஷ்ணன் சார்...

Unknown said...

////சாகம்பரி சொன்னது…
என் மனம் கவர்ந்த இந்தப் பதிவை நாளைய (5/11/11 -சனிக்கிழமை) வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தவிருக்கிறேன். நேரம் கிட்டும்போது வந்து பாருங்கள். http://blogintamil.blogspot.com////

தாராளமாக செய்யுங்கள் சகோதிரி...
நானும் அவசியம் உங்கள் வலைப் பதிவிற்கு வருகிறேன்...
தங்களின் இந்த முடிவில் மகிழ்கிறேன்.

நன்றிகள் சகோதிரி..

Post a Comment