பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.
Showing posts with label கலியுகம். Show all posts
Showing posts with label கலியுகம். Show all posts

Thursday, 25 August 2011

உலகம் இப்போது கலியுகத்தின் முடிவிலா?


செல்வம் மிக உடையோர் பலர்; அவர்கள் அதை சரியான வழியில் செலவு செய்யாது, தற்பெருமைக்கும், தனது சந்ததிக்கும், தனது வெத்துப் புகழுக்குமாக அந்த செல்வத்தை வீணடிக்கும் அவல நிலையை இன்று நாம் கண்கூடாய்க் காண்கிறோம். 

அப்பேர்ப் பட்டவர்கள் வலியவர்களாய் தன்னை ஆக்கிக் கொண்டு ஆணைகளையும் பிறப்பித்து, தான் எண்ணியதையே செய்ய வேண்டும், இந்த உலகையே தனது ஆணைக்குள் கொண்டு வரவேண்டும் என்றும் ஆணை இடுகிறார்கள். இதை, நாம் இன்று உலகில் எங்கும் காண்கிறோம்.

சரியான ஒரு நல்ல திட்டத்திற்கு, அதை சரியான முறையிலே செயல் படுத்தி இந்த வையகம் பயனுற செயல் புரிய வேண்டியவர்கள் அந்தப் பதவிக்கு வருவதில்லை. 

தகுதியற்ற தற்குறிகள்தாம், அவ்விடத்திலே அமர்கிறார்கள், அதனாலே அவர்களிடம் சென்று சேரும் பொருள்கள் யாவும்; பாத்திரம் தவறிப் போய் விழும் பைம்பொன்னை போல்; தவறானவர்களிடம் செல்வத்தை வழங்கியதையே ஒப்பும். 

அது கடைசியில் யாருக்கும் பயன் படாமல், பசி பட்டினியைப் போக்காமல் ஏழைக்கு பயன் படாமல் பாழாய்ப் போகும். போகும் என்ன? இப்போது போகின்றதைக் கண்கூடாய்க் காண்கிறோம்.

பெண்ணென்றால் அவள் ஒரு தவம், அப்படிப் பிறப்பதற்கே தவம் செய்திருக்க வேண்டும் என்றார் கவிமணி. அந்தப் பெண் அன்பின் வடிவினள், இந்த உலகம் இயங்க அந்தப் பிரமத்தால் படைக்கப் பட்ட சக்தியின் வடிவினள். 

கருணைக் கடலான அவள் கருணையோடு இந்த உலகத்தையே தன் குழந்தையாக கட்டி அணைக்க கடமையுள்ளவள். 

அப்பேர்ப் பட்ட பெண், தனது பெண்மையின் சிறப்பறியாது நாணில்லாமல் ஆட்சியை விரும்பி, அதனையும் பெற்று, அதிகாரம் பெற்ற அவளே தானென்ற மமதையில், தானும் ஒருத் தாயென்று உணராது, தர்மத்தையே கொன்று பலலட்சம் மக்களையும் கொன்றுக் குவிக்க காரணமாவாள்.


அதாவது, பெண்மை எப்படி இருக்க வேண்டும் என்பதையே மறந்தவள் நாணில்லாதவள் தான். வேறென்னவாக இருக்க முடியும்?. அதையும் இன்று நாம் கண்கூடக் காண்கிறோம். 

இந்த உலகத்தை ஆள்வோர் பெரும்பாலோர், மக்களின் பணத்தைக் கொள்ளை அடிக்க காண்கிறோம். 

வணிகர்கள் நிர்பந்தப் படுத்தப் படுகிறார்கள், மக்களுக்கான திட்டங்களை வணிக நிறுவனம் குத்தகை பெற்று செய்யுங்கால், வல்லமைகொண்ட அரசோ அதில் கட்டாயப் பங்கு கேட்டு கொள்ளை யடிக்கும். 

நிலங்கள் பறி போகும், மக்கள் உடைமைகள் பறிபோகும். கடைசியாக எல்லா பாதுகாப்பும், சத்தியமும் செத்து எல்லாம் பொய்யாய் நிற்கும் 
இதுவே கலியுக முடிவாம்.

இதை நான் கூறவில்லை. உலக மகாகவி, அமரத்துவம் பெற்ற அற்புதக் கவிஞன் இப்படிப் பாடி சென்றுள்ளான். பாடலைப் பார்ப்போம் வாருங்கள்.



 கலியுக முடிவு!

"மிகப் பொன்னுடையோன், மிக அதைச்சிதறுவோன்
அவனே வலியனாய் ஆணைதான் செலுத்துவன்
பாத்திரம் தவறிப் பைம்பொன் வழங்கலே
தவமென முடியும் தையலார் நாணிலாது
ஆட்சியை விரும்புவர், அவனியை ஆள்வோர்

குடிகளின் உடைமையைக் கொள்ளையிட்டு அழிப்பர்
பொய்யுரை கூறி வணிகர் தம் பொருளைக்
கவர்வர், இவ்வுலகத் திறுதியின் கண்ணே 
மக்களின் அரண் (அறமெலாம்) எலாம்மயங்கி நின்றிடுமால்
பொருட் காப்பென்பது போய்ப் பெருங்கேடுரும்"
                                                           -            உலக மகாகவி சுப்பிரமணிய பாரதி.

இவைகள் யாவும் இன்று நாம் கண்கூடாக பார்க்கிறோம் அல்லவா.... ஆக, வெகு தூரம் இல்லை, கலியின் முடிவு. 

சமதர்மமும், சகோதரத்துவமும், சுதந்திரமும் கொண்ட ஒரு வாழ்வு தான் இதற்கு விடிவு. அது தான் பாரதி வேண்டிய கிருத யுகம்.  

மகாகவி பாரதி சொன்னது போல் உலக மக்கள் யாவும் அறிவு பெறுவோம். அந்த அறிவே தெய்வம் என்று போற்றுவோம். 

அறிவு பெற்றால் விடிவு வரும். 

ஆண், பெண், அலி என்றும் ஏழை, பணக்காரன் என்ற எந்த பேதமும் இல்லாமல் எல்லோரும் அறிவு பெற; ஏட்டுக் கல்வி மாத்திரம் அல்லாமல், வேதாந்தம் அளித்த அந்த அறிவுக் கல்வியும் சேர்த்தே கற்போம். 

அதுவே சிறந்ததொரு உபாயம். அதனையே போற்றுவோம், அனைவருக்கும் கற்றுக் கொடுப்போம். விரைவில் கலியை வெல்வோம். மீண்டும் எந்த பேதமும் இல்லாத வேதகாலத்தை ஒப்ப, மீண்டும் இங்கே "வேதம் புதுமை செய்து" அறிவென்னும் அச்சாணி கொண்ட நவீன வேதகாலச் சக்கரத்தையே புவிக்கு ஆதாரமாய் சுழற்றுவோம்.



நன்றி வணக்கம்.
தமிழ் விரும்பி.