பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.

Monday 24 December 2012

மகாகவியவன் நினது குருவென்பதை மறந்தாயோ?



பொழுதுப் போக்க நீயொன்றும் -சும்மாப்

புளுக வேண்டாம்; மனமே!

போதைத் தரும் புகழுக்கு -அதிப்

பேதையென அலைய வேண்டாம் மனமே!

அடுத்தவர் அங்கீகரிக்க வேண்டுமென -அனுதினமும்

பிடித்ததெல்லாம் பேயெனச் செய்யாதே மனமே!

 

தடுத்தவர் கூறினாலும் கருத்தைத் தவறென

மறுத்தவர் கூறினாலும் அதுன்னை -வந்து

வருத்துவதும் வீணே; என்றுணர்வாய் மனமே!

கருத்து தனைக்கூற உனக்கிருக்கும் உரிமை

மறுத்தவர்கூற மட்டுமல்லாது போகுமோ மனமே!

அங்கீகாரம் வேண்டுவதும் ஆணவத்தின் தூண்டுதலே

அகங்காரம் கொண்ட அற்பமனமே - நினது

அகமழிய; வேண்டாம் அப்படியொரு ஆறுதலே!

 

உங்கருத்தை அங்கீகரித்தாலும்; இங்கீகரித்தாலும் மனமே

ஆங்கதவர் அனுமானமோ; அபிப்ராயமோ அன்றி

ஈங்கிது இறுதியான உறுதியான சரியான

ஓங்குயர் கருத்தென்று நெகிழ்ந்துழலாதே மனமே!

 

''என்ன வரங்கள்,பெருமைகள்,வெற்றிகள்,
எத்தனை மேன்மைகளோ!'' - அவை அத்தனையும்
''தன்னை வென்றாலவை யாவும் பெறுவது
சத்திய மாகுமென்றே'' முன்னைய முனிவர்

கருத்தை அன்றே அழகுறப் பாடி

திருத்தமாக சொன்னானே மகாகவியவன் நினது

குருவென்பதை மறந்தாயோ? மடமனமே!