சேற்றிடை பூத்த தாமரை மலரும்
காற்றிடை பரவும் தாழம்பூ மணமும்
ஊற்றிடை பொங்கும் நீர் குமிழும்
நாற்றிடை நெளிய நடனமாடும் தென்றலும்
சோற்றிடை இட்ட பசுநெய்யும் - அமுதமான
பாட்டிடை நெய்த இசையின் இனிமையும்
எனை மகிழ்விக்கும் இவையாவும்; ஈசனே!
எங்கும் நீக்கமற அமைந்த இறைவனே!
உனைப் போற்றிப் பணிதலில் பெறும்
ஆனந்தத் தினுமிவை சிறந்தனவோ?...
சாட்சிகள் ஏதும் தேவையில்லை - மன
சாட்சியும் இங்கு வேறில்லை; எங்கும்
காட்சியாய் உனைக் காண்கினும்; உந்தன்
மாட்சிமை உணரும் தாமரை ஒளிரவில்லை...
வேட்கை கொண்டேன்; வெளியாய், வெளிச்சமாய்
வேட்விக்கும் போது உயரும் நெருப்பாய்
பாற்கடல் பொங்கும் நீராய் - பச்சை
நிறம் பரப்பி பரவசமூட்டும் நிலமாய்
இசையாய், மழையாய் இயற்கை யாவிலும்
இயக்கமாய் இருக்கும் இருப்பே!...
ஊனை உருக்க, உள்ளொளி பெருக்க
நாவை அடக்க நமச்சிவாய மெனும்
நற்கதிதரும் மந்திரமே என்னுள் ஒலிக்கவே
கோவே! குருவே!! குணமில்லா அருவே!!!
தேவே! திருவே!! திரிலோக கருவே!!!
தேனே! தீதில்லாஅமுத ஊணே!! - வாணியின்
வீணை கொட்டும் அமுதப் பாணே!!!
நான் என்னும் அகந்தையை - நினதருள்
நாண் கொண்டு வீழ்த்தியே; நாயேனெனை
நற்கதியே வைப்பாய் தேவதேவனே!


