என் இதயமதைப் பற்றியே
எங்கும் வந்தாய் எனைச் சுற்றியே
வாசல் தெளிக்க வரும்போதே
தினமென் வாசல் எதிரே வருவோனே
நேசமதை நானறிவேன் - உனது
நித்திய தவமதை ஊரறியும்
சத்தியமாக சொல்கிறேன் - நீ
சாமர்த்தியமாகப் போய்விடு
என் அப்பன் எழுந்து வருமுன்னே
என்முன் இல்லாது மறைந்து விடு
அத்தை மகனுக்கே மணமுடிப்பேன் -என்
சொத்தை முழுவதையும் சீர் கொடுப்பேன்
நித்தமும் இதையே கூறித் திரியும் -என்
அண்ணன் இங்கே வந்திடுவான் - அதனாலே
விரைந்து இப்போதே போய்விடு - நம்
வீட்டு நிம்மதி காத்துவிடு
கோவிலுக்குப் போனால் கூடவே வருகிறாய்!
குளியலுக்குப் போனால் குளக்காவலன் என்கிறாய்!
விடியலுக்கு முன்னே வீட்டு வாசல் வந்தவனே
வேலைவெட்டி இல்லையா?; ஏனிந்தத்
தொல்லையா!
கல்லூரிக்கு போகும்போது கடையோரம் நிற்கின்றாய்!
கல்லூரி போனபோது எனக்கும் முன்னே காத்திருந்தாய்!
பேரூந்தில் ஏறும்போது பின்புறமே நிற்கின்றாய்!
வேறுயாருடனும் பேசும்போதும் என்னையேப் பார்கின்றாய்...
உன்மௌன பாஷையதை, என் உள்ளம் அறியும்
என் உள்ளமதின் ஆசையதை நீ அறிவாயோ?
என் உள்ளம் கவர்ந்தக் கள்வனே;
என்னை கொள்ளை அடித்துப் போனவனே;
என் உயிர்க் காதலனே....
என்னுயிர் உனை, எப்போதும்
காண்கிறேன்
எனினும் என்னுயிரே!.... சிலநேரம் என்னுயிர்
நீ, இல்லாமல் இங்கு ஏனோ? வாழ்கிறேன்
என் நிழலாய் வரும் நிஜமே!
ஏனிந்த இடைவெளி என்றே
ஏங்குது எந்தன் மனமே…
கனவில் வருகிறாய் தினமே
பிரிவின் துயரால் படுக்கையில்
இறந்துக் கிடக்கும் நானே - அந்த
நினைவில் உயிர்கிறேன் மறுகணமே
இன்னும் எத்தனைக் காலம்
இப்படியே இருப்போம் நாமே
உனக்கு மட்டும் தானே இந்த சிறுக்கி
எனைக் கட்டி முத்தம் தந்துவிடு நெருங்கி
இன்னும் ஏன்? தயக்கம் வீணே
நம்முள் நாம் கலந்தப் பின்னே!
ஒன்று சொல்வேன் அதற்கு முன்னே
பரிசம் போடு பரவசத் தோடு
எதிர்ப்பு இருப்பின்! பொறுப்பான் ஏன்?
என் மாமன் மகன் நீ தானே! - என்னை
அள்ளிக் கொண்டு போ விண்மீனே!











