பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.
Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Friday, 16 December 2011

என் நிழலாய் வரும் நிஜமே ஏனிந்த இடைவெளி என்றே ஏங்குது எந்தன் மனமே!



என் இதயமதைப் பற்றியே
எங்கும் வந்தாய் எனைச் சுற்றியே 
வாசல் தெளிக்க வரும்போதே
தினமென் வாசல் எதிரே வருவோனே
நேசமதை நானறிவேன் - உனது
நித்திய தவமதை ஊரறியும்
சத்தியமாக சொல்கிறேன் - நீ
சாமர்த்தியமாகப் போய்விடு 
என் அப்பன் எழுந்து வருமுன்னே
என்முன் இல்லாது மறைந்து விடு



அத்தை மகனுக்கே மணமுடிப்பேன் -என்
சொத்தை முழுவதையும் சீர் கொடுப்பேன்
நித்தமும் இதையே கூறித் திரியும் -என்
அண்ணன் இங்கே வந்திடுவான் - அதனாலே 
விரைந்து இப்போதே போய்விடு - நம் 
வீட்டு நிம்மதி காத்துவிடு




கோவிலுக்குப் போனால் கூடவே வருகிறாய்!
குளியலுக்குப் போனால் குளக்காவலன் என்கிறாய்!
விடியலுக்கு முன்னே வீட்டு வாசல் வந்தவனே
வேலைவெட்டி இல்லையா?; ஏனிந்தத் தொல்லையா!
கல்லூரிக்கு போகும்போது கடையோரம் நிற்கின்றாய்!
கல்லூரி போனபோது எனக்கும் முன்னே காத்திருந்தாய்
பேரூந்தில் ஏறும்போது பின்புறமே நிற்கின்றாய்!
வேறுயாருடனும் பேசும்போதும் என்னையேப் பார்கின்றாய்...



உன்மௌன பாஷையதை, என் உள்ளம் அறியும் 
என் உள்ளமதின் ஆசையதை நீ அறிவாயோ?
என் உள்ளம் கவர்ந்தக் கள்வனே;
என்னை கொள்ளை அடித்துப் போனவனே
என் உயிர்க் காதலனே.... 

என்னுயிர் உனை, எப்போதும் காண்கிறேன்
எனினும் என்னுயிரே!.... சிலநேரம் என்னுயிர் 
நீ, இல்லாமல் இங்கு ஏனோ? வாழ்கிறேன்


என் நிழலாய் வரும் நிஜமே!
ஏனிந்த இடைவெளி என்றே
ஏங்குது எந்தன் மனமே

கனவில் வருகிறாய் தினமே 
பிரிவின் துயரால் படுக்கையில்
இறந்துக் கிடக்கும் நானே - அந்த 
நினைவில் உயிர்கிறேன் மறுகணமே
இன்னும் எத்தனைக் காலம்
இப்படியே இருப்போம் நாமே


உனக்கு மட்டும் தானே இந்த சிறுக்கி
எனைக் கட்டி முத்தம் தந்துவிடு நெருங்கி
இன்னும் ஏன்? தயக்கம் வீணே 
நம்முள் நாம் கலந்தப் பின்னே!

ஒன்று சொல்வேன் அதற்கு முன்னே
பரிசம் போடு பரவசத் தோடு 
எதிர்ப்பு இருப்பின்! பொறுப்பான் ஏன்

என் மாமன் மகன் நீ தானே! - என்னை 
அள்ளிக் கொண்டு போ விண்மீனே!







Saturday, 5 November 2011

என்னை ஏன் மறந்தாய்? எரியும் நெருப்பில் எறிந்தாய்!



என்னை ஏன் மறந்தாய்?
எரியும் நெருப்பில் எறிந்தாய்!
கண்ணை நானும் இழப்பேன்!
உன்னை நானும் இழப்பேனோ?

உயிரை உனக்கு தந்தேன்
என்னுயிரே நீயென வந்தாய்
விண்ணில் ஏறவும் துணிந்தேன்
மண்ணே சொர்க்கமென உணர்ந்தேன்...

உன்னை எனக்குப்பிடிக்கும் என்றவளே
என் கண்ணை கவர்ந்து சென்றவளே 
என்னை ஏனடி?  மறந்தாய்
ஏது செய்யவே நினைந்தாய்?


ஜென்மங்கள் கோடி எடுத்தாலும்
விண்ணிலே பிறந்து ஒளிர்ந்தாலும்
வேண்டும் வரம் ஒன்று மட்டுமே அது 
என் ஜீவனாக என்றும் நீ மட்டுமே...

வரம் வேண்டியே தவம் நின்றேன் 
தரவேண்டிய வரம் மறந்தே 
என்னை ஏன்? மறந்தாய்
இதயக் கதவை அடைத்தாய்...

இமயம் ஏறிய அவலம் - இங்கே 
இதயம் பற்றி எரியும்!...
உதயம் இனியும் உண்டோ? - உன் 
உயிரும் என்னுள் கலந்து நின்றே!...

விண்ணில் பறக்கவும் வேண்டேன்
உன்னில் கலக்கவும் வேண்டேன்
மண்ணில் சொர்க்கமும் வேண்டேன் 

என்னுள் என்னை அல்லாமல்
உன்னை மட்டுமே இருக்க வேண்டி
பெண்ணே! உன்னை ஒன்றே கேட்பேன் 
அதனாலே மீண்டும் உயிர்ப்பேன்...

மறுக்காமல் அளிப்பாய் - மனம்
கிறுக்காய்ப் போன என் இதயம்
நொறுங்காமல் ஒருசொல் உதிர்ப்பாய் 

ஆம், ஒரு சொல் உதிர்த்து
என்னை மீண்டும் உயிர்ப்பாய்!
ஒரே ஒரு சொல் அது?
உன்னை எனக்கு பிடிக்கும் என்று!

அன்புடன்
- தமிழ் விரும்பி.


Friday, 14 October 2011

ஓஓ.. தென்றலே! ஒரு பதிலும் கூறாமல் நிற்பதேன்?





சிட்டுக்குருவியே! சிட்டுக்குருவியே!
ஒத்தையடிப் பாதையிலே, ஓரமாய் 
ஒண்டியாய் நிற்பதேனோ?....

என்னவள், அவளைப் போலே
உன்னவளும் இன்னும் வரவில்லையோ?
.................................................................................
பெண்ணவள் வரும் நேரமிது -உன்
பெட்டையும் வரவில்லையோ?

வெகுநேரமாகியது இன்னும் என் செல்லக்
குருவியதைக் காணவில்லை? -அவளின் 
கொஞ்சு மொழியும் கேட்கவில்லை -அதனாலே 
கொத்தி தின்னும் கொய்யாவும் பிடிக்கவில்லை,
அத்திப் பழமதையும், அறவே பிடிக்கவில்லை.

வானுயர போகவில்லை, வாயாரப் பாடவில்லை
தேனூறும் மலர்களிலே திளைத்திடவும் மனமில்லை.
வானூரும் நிலவைப் போல் என்
வாழ்வினிலே வந்தவளை - இங்கே
நாள்தோறும் நான் கண்டே கூடி களித்திருப்பேன்
நாயகிதான் வரவில்லை நான்என் செய்வேனோ?.

அரிதாரம் பூசமாட்டாள், ஆரவாரம் செய்யமாட்டாள்
அன்புடனே அழகி; என்குருவி - தன்
அழகான அலகோடு என்னலகு சேர்த்தே 
ஆழமான தன் காதலையும் என்னிடத்தே
ஆசையோடு கூறி சிலிர்ப்பாள்..


ஆவலோடு காதல் கொண்டே நானும்
அவளருகே போகும்போது அதை
அனுமதித்தே தனது இருறக்கை விரிப்பாள்!
இதயம் நிறைந்தவள் என் இளஞ்சிட்டவள்,
இறக்கை விரித்தே இப்போதே வந்திடுவாள்!

ஓ! மானுட நண்பனே.... 
உன்னவள்.... இந்நேரம் 
வந்து போயிருப்பாளே! -ஏன்
இவ்வளவு தாமதம் -இனி  
என்ன செய்யப் போகிறாய்?...

என் அருமை குருவியே!...
இனி நான் என்ன செய்வேன்?
இதயம் கனக்கிறது என்
இளம்நெஞ்சும் பட படக்கிறது....

வந்தாளா? வந்து சென்றாளா?
வருவாளா? வாராது இருப்பாளா?
யாரிடம் கேட்டிடுவேன்? -இப்போது
யாதொன்றும் அறிகிலேன்!

கோதை அவளைக் காணவில்லை
கொலுசொலியும்  கேட்கவில்லை 
கொஞ்சும்மொழி கேட்பேனோ? -என்
அஞ்சுகத்தை அள்ளி அணைப்பேனோ?

நெஞ்சமது தவிக்கிறதே! 
நெடு நேரமும் போகிறதே!
மண்ணில் நிலவுஅவள் வாராது
விண்ணில் நிலவும் வந்திடுமோ?!...

கவலை விடு தோழனே! 
கணக்காய் உனக்கு சில
உபாயம் சொல்லுகிறேன் கேள்.

என்னவளைக் காணாத போது -யானும் 
எதிர்வரும் தென்றலைக் கேட்ப்பேன்..
தென்றலும் வரவில்லை என்றால்
மன்னவள் மலர் பாதச்சுவடு பார்ப்பேன்... 

எண்ணமதை சொல்லிவிட்டேன் 
எதிர்வரும் தென்றலை கேள் -அதோ!
பெட்டையவளும் வந்துவிட்டாள்
பேரின்பம் தந்து, பெற்று விடவே...
நாளை பார்ப்போம், நானென்
நாயகியோடு போகிறேன்...



ஹா! அற்புதம் உரைத்தாய்...
சென்று வா! குருவியே -உன்
பெட்டையோடு சேர்ந்தே 
பேரின்பம் கண்டிடவே...

ஓ தென்றலே! ஒருகணம் நிற்பாயா?
ஓடிவரும் வழியிலே நீ! -என்
ஓவியம் அவளைப் பார்த்தாயா?

ஓஓ.. தென்றலே! 
ஒரு பதிலும் கூறாமல் நிற்பதேன்?
ஒடிந்துவிழும் என்மனதை 
உயிர்பிக்க மாட்டாயா? -உன் 
ஓரப்பார்வையின் அர்த்தமென்ன
ஓயாமல் கேட்கிறேனே.... 
உன் காதுகளிலே விழவில்லையா?

ஆ...ஹா!...வாசம் வருகிறதே! 
என் மன்னவள் சூடும்,
மல்லிகை வாசம் வருகிறதே!
பட்டாம்பூச்சி அவள் பட்டு மேனியின் 
வாசமும் கலந்து வருகிறதே!

ஹா..ஹா.! இதயம் நிரம்புகிறதே! 
என் இதயம் நிரம்புகிறதே! -என் 
துன்பம் விலகி இன்பம் பெருகுகிறதே!...
என் உயிரின் வாசமது
என்னுள்ளே நுழையும் போதே!

ஓ! மௌனத்தில் பேசும் தென்றலே...
மயக்கம் தெளிந்தேன்; என்னுயிரின்
வாசமதை உன்னிடம் தந்தனுப்பியே
பாசமதை சொல்லிச் சென்றாளோ! 
பாவை அவள்... நான் பாவமென்றே!....

ஓ! தென்றலே.... 
இன்று நீ! மௌன விரதமானாலும்
உன் மகத்துவம் அறிந்தேன்!...

தென்றலே! திங்கள் வரும் நேரமிது
அல்லியவள் மலர்ந்திடுவாள் 
விரைந்தே ஓடிவிடு - அவளைத் 
வேண்டுமளவு ஆரத் தழுவிடு...

சென்று வா தென்றலே! -நான்
சிந்தை குளிர்ந்தேன், உன் செய்கையால்
நன்றிகள் உனக்கு, நாளை பார்ப்போம்...

நாளை வரும் வேளையில் 
நாயகி அவள் வந்திடுவாள் 
கலங்கிடும் கண்ணே கவலைவிடு...
அப்போது தப்பாமல் நீயும் அவளை -உன்
கண்ணின் மணியவளை கண்ணுள்ளேக்
நீங்காது கொண்டிடலாம்..  
அதுமுதல் தூங்காது 
காதல் செய்தே களித்திடலாம்!.

பட படக்கும் மனமே! என்போல் 
பாவம் நீயும் தான்!...
என்ஆருயிரே... இப்போது 
என்னிடத்தில் இல்லாதபோது 
உனக்கு ஆறுதல் கூறமட்டும்  
என்னிடம் வார்த்தைகள் ஏது?


ஏ மனமே!.....
ஒன்று கூறுவேன் அமைதிகொள்....
வீடுபேறு தருபவள் நாளை வருவாள்! 
வேறுவழியில்லை நாம் இப்போது
வீடு போவோம் என்னுடனே வா!....

அன்புடன்
தமிழ் விரும்பி - ஆலாசியம் கோ.